பொய் சொல்லலாம்! ஆனால் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு சொல்லக் கூடாது! முதல்வர் ஸ்டாலின் கலகல
விருதுநகர்: பொய் சொல்லலாம், ஆனால் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு சொல்லக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம்புத்தூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டாக்களை தமிழக முதல்வர் வழங்கினார்.

முதல்வரின் வருகையால் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டன. நான் முதல்வன் திட்டம், உரிமைத் தொகை திட்டம் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அரங்கத்தையும் பார்வையிட்ட முதல்வர் குறைகளை கேட்டறிந்தார்.
மொத்தமாக ரூ 417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் 16852 பேருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கடன்கள், வேளாண் கருவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், காமராஜரை நமக்கு அளித்த மண் விருதுநகர். விருதுநகர் என்றதும் அனைவரும் எண்ணத்திலும் வருபவர் சங்கரலிங்கனார். பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும்.
அருப்புக்கோட்டை அருகே புதிய சிப்காட் தொழிலகம் அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளை 41 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். தமிழகத்திலேயே அதிகளவு உயர்கல்வி சேர்க்கை விருதுநகர் மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது.
அருப்புக்கோட்டை மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி மாநகராட்சியில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மாநாட்டுக் கூட்ட அரங்கம் உருவாக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் 24 கோடி ரூபாய் செலவில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்தியா டுடே சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த பெருமையையும் புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான். உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்.
தமிழகத்தை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன், போராடுவேன். இந்த உழைப்பின் பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக உளறி வருகிறார்.
அதை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய்ய சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அது போல் பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் தற்போது சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications