பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? நம்ப முடியலை.. வரட்டும் பார்க்கலாம்- சிபிஎம் பாலகிருஷ்ணன்
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்வதை நம்ப முடியாது என்கிறார் சிபிஎம் பாலகிருஷ்ணன்.
விருதுநகர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பை நம்ப முடியவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பாலகிருஷ்ணன் கூறியதாவது: அதானி குழுமங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் சிறு, குறு தொழில்களை நசுக்க பார்க்கின்றனர். பிபிசி ஊடக நிறுவனத்தில் வருமான வரி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத் மதமோதலில் பிரதமர் மோடிக்கு தொடர்பிருப்பதாக ஆவணப்படம் வெளியிட்ட காரணத்தால் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டை முன்வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவில் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருப்பார். அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதி செய்ததால் நிலக்கரி மீதான இறக்குமதி வரியை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதனை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் பிரதமர் மோடி பதில் தர மறுக்கிறார்.
தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது. இதனால்தான் தமிழ்நாட்டு பாஜகவினருக்கு ஆளுநர் பதவிகள் தரப்படுகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடைசிநேரத்தில் மோசடிகளை அரங்கேற்ற அதிமுக-பாஜக கூட்டணி முயற்சிக்கிறது. இதனை தடுக்க வேண்டும். இடைத்தேர்தல் களத்தில் பெரும் எண்ணிக்கையில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் குவிக்கப்படுவதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என விரும்புகிறோம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், உயிரோடு இருக்கிறார் என்பதை நம்ப முடியாது. நெடுமாறனின் பிரபாகரன் குறித்த அறிவிப்பு ஏற்புடையது அல்ல. அப்படியே பிரபாகரன் உயிருடன் வந்தால் அவர் வரும் போது பேசலாம். இத்தகைய அறிவிப்புகள் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்












Click it and Unblock the Notifications