வச்ச கண் வாங்காமல் பார்த்த ஸ்டாலின்.. 21 கி.மீ தூரம்.. ‘கொடி பறக்குதா?’ - மேடையில் ‘செம’ உற்சாகம்!
விருதுநகர் : திமுக முப்பெரும் விழாவுக்காக விருதுநகர் மாவட்ட எல்லை முதல் 21 கி.மீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் திமுக கொடிகள் நடப்பட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் பிரமாண்ட ஏற்பாடுகளையும், வரவேற்பையும் பார்த்து அசந்து போயுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேடைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக காணப்பட்டார். விழாவில் பேசுகையில், வரும் வழியெங்கும் திமுக கொடிகள் பறந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
அன்று டிஆர்.பாலுவுக்கு நடந்த கொடூர சம்பவம்.. கழுத்துச் சதையுடன் ஒட்டிய பனியன்.. வரலாறு சொன்ன ஆ.ராசா!
திமுக முப்பெரும் விழா
பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் ஒன்றிணைத்து "முப்பெரும் விழா"வாக திமுகவால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் முப்பெரும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கினார்.
நூல்கள் வெளியீடு
இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முரசொலியில் உடன்பிறப்புகளுக்குக் எழுதிய கடிதங்களின் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 4,041 கடிதங்கள், 21,510 பக்கங்களை கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் "திராவிட மாடல் ஆட்சி தொகுப்பு" என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு சிறப்பித்தார்.
5 பேருக்கு விருது
சம்பூர்ணம் சாமிநாதன் அவர்களுக்கு 'பெரியார் விருது' வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை இரா.மோகன் அவர்களுக்கு 'அண்ணா விருது', திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்களுக்கு 'கலைஞர் விருது', புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு அவர்களுக்கு, 'பாவேந்தர் விருது', குன்னூர் சீனிவாசன் அவர்களுக்கு, 'பேராசிரியர் விருது' வழங்கிச் சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவர்களுக்கு விருது பட்டயம், பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பிரமாண்ட ஏற்பாடுகள்
திமுக முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பிரமாண்டமாகச் செய்துள்ளனர். விழா நடக்கும் இடத்தின் முகப்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி முகங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீபம் ஏந்திய நிலையில் இருக்கும் சிற்பங்கள் வடிவிலான செட், மலை முகப்புடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது.
லட்சம் பேர்
விழா மேடைக்கு செல்ல 3 நுழைவாயில்களும், அதன் உள்பக்கம் மாளிகை போன்ற முகப்பும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். 6 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் துவங்கி சாலையின் இருபுறம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 5 ஆயிரம் எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
21 கி.மீ தூரத்திற்கு
விருதுநகர் மாவட்ட எல்லை முதல் சாத்தூர் வரை 21 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபக்கமும் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. முதல்வர் முக ஸ்டாலின் காரில் வரும்போதே இந்த பிரமாண்ட ஏற்பாடுகளைப் பார்த்து வியந்துள்ளார். இதுகுறித்து, விழா மேடையிலும் பாராட்டிப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் மாவட்டத்தின் இரண்டு மாவட்டச் செயலாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு பிரமாண்டமாக இந்த விழாவை நடத்திக் காட்டியுள்ளதாக பாராட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
4 இடங்களில்
திமுக முப்பெரும் விழா நடக்கும் இடத்துக்கு வரும் வழியெங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மாவட்ட எல்லையில் உள்ள உசிலம்பட்டி மற்றும் சத்திரரெட்டியபட்டி, பிஆர்சி, கலெக்டர் அலுவலகம் ஆகிய 4 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக கொடியேந்திய தலா 5 ஆயிரம் தொண்டர்களுடன், செண்டை மேளம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேடையிலேயே பாராட்டிய ஸ்டாலின்
இந்த வரவேற்பு ஏற்பாடுகளால் முதல்வர் ஸ்டாலின் அசந்து போயுள்ளார். விழா மேடைக்கு வந்த ஸ்டாலின், இதன் காரணமாக மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். வழியெங்கும் கறுப்பு சிவப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தது பற்றி விருதுநகர் மாவட்டத்தின் இரு அமைச்சர்களுக்கும் பாராட்டு தெரிவித்து விழா மேடையிலும் பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
வச்ச கண் வாங்காமல்
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "வைத்த கண் வாங்காமல் கொடிகளை பார்த்தபடியே வந்தேன். தென் மண்டலத்தின் தென்றல் காற்று என்னை வருக வருக என பட்டொளி வீசி வரவேற்பைக் கொடுத்தது. முதல்வரான பிறகு அதிகமான அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அரசு விழா என்பதால் கட்சிக்கொடி கட்ட வேண்டாம் என கண்டிப்போடு தெரிவித்து வருகிறேன். இதனால் பலரும் என் மீது வருத்தப்பட்டார்கள்.
கழகத்தின் கோட்டை
அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் கட்சி விழா நடைபெறும் இன்று நம் கொடி பறக்கிறது. கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றக் காரணமாக இருந்தது நம் இருவண்ணக் கொடி. அந்தக் கொடிக்கு என் வணக்கத்தை செலுத்த விரும்புகிறேன். விருதுநகர் கழகத்தின் கோட்டை." எனத் தெரிவித்துள்ளார்.