நல்ல மனிதர்களை ஆட்சியாளராக தேர்வு செய்யுங்க! கட்சி பாகுபாடு வேண்டாம்! துரை வைகோ வேண்டுகோள்!
விருதுநகர்: கட்சிகளை கடந்து நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மிக கடுமையாக உழைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆளுநர் ரவி மத்திய பாஜக அரசின் தமிழக ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என துரை வைகோ சாடியுள்ளார்.

மாமனிதன் ஆவணப்படம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து துரை வைகோ உருவாக்கியுள்ள மாமனிதன் ஆவணப்படம் சிவகாசியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரையிடப்பட்டது. இதனை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த துரை வைகோ அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் பல்வேறு முடிவுகளுக்கு மத்திய அரசு தடைக்கல்லாக உள்ளது என்றும் ஆளுநர் ரவி மத்திய பாஜக அரசின் தமிழக ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

பிரச்சனைகள்
திருவள்ளுவரில் தொடங்கி ராஜ ராஜ சோழன் விவகாரம் வரை பாஜக தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாகவும் ராஜ ராஜ சோழன் குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்துக்கோ சொந்தமானவர் அல்ல எனவும் கூறினார். தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட மிகப்பெரும் மன்னன் ராஜ ராஜ சோழன் என புகழாரம் சூட்டினார். வளர்ச்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு மத அரசியலை பாஜக செய்து வருவதாக துரை வைகோ வேதனைத் தெரிவித்தார்.

நல்ல மனிதர்கள்
கட்சிகளை கடந்து நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என துரை வைகோ கேட்டுக்கொண்டதுடன் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மிக கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதால், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள அரசை கவிழ்க்கலாம் என மத்திய பாஜக அரசு முயன்றால் அது அவர்களுக்கு தான் தோல்வியில் முடியும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

அனைத்து மாவட்டங்கள்
அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து வரும் துரை வைகோ, கட்சியினருடன் ஒன்றாக அமர்ந்து வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்படத்தை திரையில் பார்த்து வருகிறார். துரை வைகோ பம்பரம் போல் பரபரப்பாக சுழல்வதால் மதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications