ஓபிஎஸ் கோட்டைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி.. விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்.. ஆர்பி உதயகுமார்!
விருதுநகர்: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் எடப்பாடி பழனிசாமியின் கைகளே ஓங்கியுள்ளது. இதன் மூலம் அதிமுக கிட்டத்தட்ட 99 சதவிகிதம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்லலாம்.
எனினும், அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!
விரைவில் பொதுச்செயலாளர்?
இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தேர்தலை நடத்தி பொதுச் செயலாளர் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்பதால், அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தென் மண்டல சுற்றுப்பயணம்
ஆனால் அதற்கு முன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களின் ஆதரவு தமக்கு உள்ளது என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதற்கு ஏற்றாற்போல் ஓபிஎஸ் கோட்டையான தென் மண்டலத்திற்கு இபிஎஸ் சுற்றுப்பயனம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மஹாளய அமாவாசையையொட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சாமி தரிசனம் செய்தார்.
மதுரை வரும் இபிஎஸ்
அப்போது எடப்பாடி பழனிசாமியின் தென் மண்டல சுற்றுப்பயணம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தோலுரிக்கும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பொதுமக்களிடம் திமுக அரசின் நடவடிக்கைகைளை எடுத்துரைக்கும் விதத்தில் வரும் 29-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
இபிஎஸ் தான் நம்பிக்கை
அதிமுகவின் ஒரே நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி தான். அவருக்கு தென் மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்ற வேறுபாடு கிடையாது. பொதுக் குழு கூட்டம் நடத்தி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த விதமான தடையும் கிடையாது. விரைவில் பொதுக்குழு நடைபெறும். கடைக் கோடியில் கொடி ஏற்றிய அதிமுக தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதற்கு பல சாட்சிகள் உள்ளது அதில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார்.