திடீர்னு இப்படி ஆகிடுச்சு “அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” அய்யய்யோ.. விபரீத முடிவெடுத்த இளைஞர்!
விருதுநகர் : ஆடுகள் திடீரென உயிரிழந்ததால், அப்பா திட்டுவார் என பயந்து பூச்சிக்கொல்லி மருந்து குடித்து இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா வந்தால் நான் பேசிக் கொள்கிறேன் என அண்ணன் ஆறுதல் சொன்னபோதும், பயம் விலகாத இளைஞர் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.
மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றதில் இரண்டு ஆடுகள் திடீரென உயிரிழந்ததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு மேய்த்த இளைஞர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள நல்லுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மூத்த மகன் ராஜ்குமார் (24), இரண்டாவது மகன் சரத்குமார் (23). சரத்குமாரும், ராஜ்குமாரும், முனியசாமிக்கு உதவியாக கால்நடைகளை மேய்த்து வந்தனர். இந்நிலையில் ராஜ்குமார் சொந்த வேலை காரணமாக பக்கத்து ஊரான வீரசோழனுக்கு சென்றதால், காலையில் ஆடுகளை அவிழ்த்துக்கொண்டு சரத்குமார் மேய்ச்சலுக்கு புறப்பட்டிருக்கிறார். அப்போது அந்த ஊரில் நடந்த விசேஷ வீட்டில் மீதமான சாப்பாட்டை சரத்குமார் மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்ற ஆடுகள் தின்றதாக கூறப்படுகிறது.

ஆடுகள் பலி
இதையடுத்து சரத்குமார், மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆடுகளில் இரண்டு ஆடுகள் திடீரென சுருண்டு விழுந்து இறந்துள்ளன. இதனால் பதற்றமடைந்த அவர், என்ன செய்வது எனப் புரியாமல் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ்குமார், ஆடுகள் இறந்து கிடப்பது குறித்து தம்பியிடம் கேட்டுள்ளார். அப்போது, நடந்ததை அவரிடம் கூறியதோடு, "ஆடுகள் இறந்துவிட்டதால், அப்பா வந்தால் என்னைத் திட்டுவார்" எனக் கூறி சரத்குமார் அழுததாகக் கூறப்படுகிறது.

மருந்தைக் குடித்து
இதனால், தம்பியை சமாதானப்படுத்திய ராஜ்குமார், அப்பா வந்தால் நான் பேசிக் கொள்கிறேன், நீ அழாமல் இரு என சரத்குமாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறிய சரத்குமார், மலைராஜ் என்பவரின் தோட்டத்திற்குச் சென்று தந்தையை நினைத்து பயந்து பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார்.

உயிரிழப்பு
பின்னர், இரவில் வீட்டுக்கு போன் செய்த அவர், அப்பாவுக்கு பயந்து தான் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன முனியசாமியும், ராஜ்குமாரும் டூவீலரில் மலைராஜின் தோட்டத்திற்குச் சென்று அங்கு மயக்க நிலையில் கிடந்த சரத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமக்குடிக்கும், பின் அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரத்குமார் உயிரிழந்தார்.

சோகம்
இந்தச் சம்பவம் குறித்து, வீரசோழன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆடுகள் திடீரென உயிரிழந்ததால், அப்பா வந்து திட்டுவார் என பயந்து பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications