ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்.. அன்னதானம் வழங்க சூப்பர் வசதி.. இனி ஈஸியா நன்கொடை அளிக்கலாம்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்களில் பக்தர்கள் அன்னதான திட்டத்துக்கு எளிமையாக நன்கொடை செலுத்தும் வகையில், இணையதளம் வாயிலாக 'கியூ ஆா் கோடு' பயன்படுத்தி நன்கொடை அளிக்கும் வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில். இந்தக் கோவிலின் கோபுரமே தமிழ்நாடு அரசின் சின்னத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில்தான் பெரியாழ்வார் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் ஆகியோர் அவதரித்தனர்.

ஆண்டாள் சூடிய மாலையை எடுத்துச் சென்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை தினத்தன்று அணிவது வழக்கம். அதேபோல, ஆண்டாளின் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப் புடவை ஆண்டாளுக்கு உடுத்துவதும் வழக்கம்.
கல்வி, வியாபராத்தில் முன்னேற்றம், திருமண வரம், குழந்தைப்பேறு, செல்வம் செழிப்பு நிலைபெற, விவசாயம் செழிக்க, ஆரோக்கியம் மேம்பட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து பக்தர்கள் மனமுருகி வேண்டினால் நிறைவேறும் என்பது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 100 பேருக்கு மதிய வேளையில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.
அன்னதானம் திட்டத்துக்கு ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் நன்கொடையும், 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும். இந்தத் தொகையில் இருந்து வரும் வட்டியின் மூலமாக ஆண்டுக்கு ஒரு நாள் பக்தர்கள் விரும்பும் நாளில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் அன்னதானத் திட்டத்தின் வங்கிக் கணக்கு ஐஓபி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளது.
இதையடுத்து, அந்த வங்கி சார்பில் ஆண்டாள் கோயில் மற்றும் மடவார் வளாக வைத்தியநாத சுவாமி கோயில்களுக்கு கியூ ஆர் கோடு மூலம் நன்கொடை அளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் எளிமையாக அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளிக்கலாம்.
அன்னதானத் திட்டத்துக்கு 'கியூ ஆா் கோடு' மூலம் நன்கொடை அளிக்கும் இந்தத் திட்டத்தை ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் தொடங்கி வைத்தாா்.
அதேபோல, மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் எளிமையாக நன்கொடை அளிக்கும் வகையில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் மான்ராஜ் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள், ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.












Click it and Unblock the Notifications