அவர் கிட்ட ஏதோ இருக்கு.. விஜய் குறித்து ராஜேந்திர பாலாஜி சொன்ன அந்த விஷயம்
விருதுநகர்: விஜயின் நிதானத்தை பார்க்கின்றபோது அவர் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிகின்றார். திமுகவின் அடக்குமுறையையும், ஆணவ அரசியலையும் எதிர்த்து கட்சியைத் தொடங்கியுள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், வள்ளல் என்று மக்களால் போற்றப்படும் எம்ஜிஆரால் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மக்களுக்கு கொடுக்கின்ற கட்சியாக அதிமுக இருக்கின்றது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முறையும் தேர்தல் நேர்மையாக நடக்காது என்று நாங்கள் நினைக்கிறோம். அதிகார துஷ்பிரயோகத்தால் மக்கள் அலைக்கழிக்கப்படுவார்கள்.
எனவே, அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தலைமை அறிவித்துள்ளது. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணித்துள்ளன. அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டன.
அந்த சமயத்தில் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார் ஸ்டாலின். ஆனால், தற்போது ஒரு ரூபாய் கூட மக்களுக்கு வழங்கவில்லை. அதிமுக ஆட்சி அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சி அவர்களின் குடும்பத்திற்கான ஆட்சி. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்வதற்குத்தான் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என்று கூறுவது ஏமாற்று வேலை.
தமிழக மக்கள் பாதிக்கப்படாத மக்கள் வலுவான கூட்டணியை அமைத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை அமைக்கும். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளே திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. கூட்டணிக்கு உள்ளேயே திமுகவுக்கு எதிரான அரசியல்தான் இருக்கின்றது.
திமுகவின் அடக்குமுறையையும், ஆணவ அரசியலையும் எதிர்த்து விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். விஜயின் நிதானத்தை பார்க்கும்போது பக்குவப்பட்ட அரசியல்வாதியாக தெரிகின்றார். திமுக அரசின் செயல்பாடுகளை நாங்கள் விமர்சனம் செய்தால் அரசியல் என்பார்கள். ஆனால், புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உள்ளிட்டோரும் திமுகவை விமர்சனம் செய்வது அதிமுகவுக்கு பலம்தான்.
2010 ஆம் ஆண்டில் பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. ஆனால், 2011 இல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சிகள் பிரிந்துள்ளன என்ற கருத்துதான் அப்போதும் நிலவியது. அந்த வரலாறு 2026 இல் திரும்பும் என்றார்.












Click it and Unblock the Notifications