கேரளாவில் ஆயுத பயிற்சி..விருதுநகரில் மாவோயிஸ்டு தீவிரவாதி ஐயப்பன் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது!
விருதுநகர்: கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் நடத்தப்பட்ட ஆயுதப் பயிற்சியில் பங்கேற்றதாக தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாட்டின் சில மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதப் போர் நடத்தும் மாவோயிஸ்டுகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆந்திரா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா எல்லைகளின் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம்- கேரளா எல்லையில் நிலம்பூர் வனப்பகுதியில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள் அங்கு முகாமிட்டு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட கேரளா போலீசார், மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் அஜிதா உள்ளிட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
நிலம்பூர் மாவோயிஸ்டுகள் பயிற்சி தொடர்பான வீடியோ பதிவுகளை கேரளா போலீசார் வெளியிட்டிருந்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருப்பதும் தெரியவந்தது. இந்த வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் அவ்வப்போது சோதனை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருதுநகர் தம்மநாயக்கன்ப்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரைஎன்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து கைது செய்தனர். ஐயப்பனை அவரது மனைவி ஊரான குடல்புரிநத்தத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் ஐயப்பன், மாவோயிஸ்டுகளின் ஆயுதப் பயிற்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே வழக்கில் 2017-ம் ஆண்டு கேரளா போலீசாரால் ஐயப்பன் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின்னர் கேரளா மாநிலம் விய்யூர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஐயப்பன்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐயப்பன் முதலில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் கேரளாவுக்கு விசாரணைக்காக ஐயப்பன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.