ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டு தியானம் மேற்கொண்டு வருகிறார் நிர்மலாதேவி.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நிர்மலாதேவி. இவர் அங்குள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியையாக இருந்தார். இந்நிலையில் இவர் மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் பயிலும் மாணவிகளை மூளைச்சலவை செய்தார்.
இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஜாமீன்
இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர்.
உயர்நீதிமன்றக் கிளை
எனினும் நிர்மலாதேவி பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் அவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது.
ஆஜர்
ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 11 மாத சிறைவாசத்துக்கு பிறகு மார்ச் 20-ஆம்தேதி சிறையிலிருந்து வெளியே வந்தார் நிர்மலா தேவி. அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
பரபரப்பில் நீதிமன்ற வளாகம்
இன்றைய தினம் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்த நிலையிலும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தன் கணவரும், உறவினர்களும் வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும் என கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.