'எங்க ஊர் கிணத்த காணோம்..' பொதுமக்கள் புகார்.. விருதுநகரில் வினோதம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கிணற்றை திடீரென காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் அருகில் உள்ள வெம்பக்கோட்டை சாலையில், அரசு ஊரக தொழில் துறைக்கு சொந்தமான தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் குடோன் வளாகம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு இருந்து வந்தது.
நல்ல நிலையில் தண்ணீருடன் இருந்து வந்த இந்த கிணறு தற்போது மாயமானதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்களிடையே விசாரணை கேட்டபோது சங்கத்திற்கு அருகிலுள்ளவர்கள் இக்கிணற்றினை மண் மற்றும் கட்டிட இடிபாட்டு கற்கள் கொண்டு இரவோடு இரவாக மூடி விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
இதுகுறித்து அங்குள்ள கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் இது குறித்து கேட்டால் பதில் கூற மறுக்கின்றனர். அரசு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிலத்தில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கோ அல்லது அழிப்பதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் காமராஜபுரம், முனியசாமி கோவில் தெரு, தில்லைநகர், பெரியார் நகர், உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் போர்வெல் மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் மழைக்காலத்தில் இப்பகுதி மழை நீர் வடிவதற்கும் இந்த கிணறு மூல ஆதாரமாகத் திகழ்ந்து வந்தது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மழைநீர் தேங்கியதால் அவதி
யாருடைய அனுமதியும் பெறாமல் இக்கிணற்றினை மூடியதால் இந்த அலுவலக வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி தெப்பமாக காட்சியளிக்கிறது. மேலும் அலுவலகம் மற்றும் குடோன் உள்ளும் மழைநீர் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள தீப்பெட்டி பண்டல்கள் முழுவதும் நனைந்து முற்றிலும் வீணாகக் கூடிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

சிரமத்தைச் சந்திக்கும் மக்கள்
தற்பொழுது இந்த கிணறு இருந்திருந்தால் இப்பகுதியில் தேங்கிய மழை நீர் அனைத்தும் கிணற்றினுள் செல்ல ஏதுவாக இருக்கும் எனவும், இப்பகுதி கோடைக்காலத்தில் பெரும் வறட்சியையும் குடிநீர் தட்டுப்பாட்டினையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். யாரோ ஒரு சிலர் செய்த தவறினால் இப்பகுதி மக்கள் சிரமப்படுவது கண்டனத்திற்குரியது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்..

நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
அரசு அலுவலக வளாகத்திற்குள் இருக்கும் கிணற்றினை அனுமதியின்றி இவ்வாறு மூடியது மிகவும் தண்டனைக்குரிய குற்றம் என்பதாலும், இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த கிணற்றினை தூர்வாரி மக்களின் பயன்பாட்டிற்கும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications