சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கொடூரம்.. ரத்த வங்கி ஊழியர் சஸ்பெண்ட்
விருதுநகர்: சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக ரத்த வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந் நிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர்.
கர்ப்பிணிக்கு ரத்ததானம்
2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், அதை அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
மோசமடைந்த உடல்நிலை
இந் நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைய, இதையடுத்து அந்த பெண் அதே தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்ஐவி உறுதி செய்யப்பட்டது.
உறுதியானது எச்ஐவி
கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக் தகவல்கள்
விசாரணையில் எய்ட்ஸ் பாதித்தவரின் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்தது எப்படி என்பது பற்றி விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தார். விதிகளின் படி அந்த நபருக்கு அரசு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எய்ட்ஸ் குறித்து தகவல்
இது குறித்து, உடனடியாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட நபர் சமீப காலத்தில் வேறு யாருக்காவது ரத்த தானம் செய்துள்ளாரா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது. அபபோதுதான், அவர் கடந்த மாதம் 30ம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருப்பதும், அந்த ரத்தம் தான் சாத்தூர் மருத்துவ மனையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் தெரிய வந்தது. 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைக்கு இந்த முழு விவரங்களும் வெளி வந்துள்ளன.
பணியில் அலட்சியம்
முடிவில் மருத்துவமனை தரப்பில் விசாரிக்கப்பட்டு, பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். தொடரும் விசாரணையில் மேலும் சில மருத்துவமனை ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கண்காணிப்பு அவசியம்
ஏழை, எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக கடைசிப் புகலிடமாக திகழும் அரசு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணமாகும்.எனவே, இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளை போக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதோடு, கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே இந்த தருணத்தில் நாம் உணர வேண்டிய பாடம்.