விருதுநகர் தொகுதியில் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் ஏன்? பிரேமலதா கிடுக்கிபிடி கேள்வி
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார்.

இந்த நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டி அளித்த போது, விஜய பிரபாகரன் தோற்கவில்லை.
திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.
அது போல் நள்ளிரவில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு? 39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர் அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன். ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளோம். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கேட்டிருக்கிறோம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications