ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!
விருதுநகர்: சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரு தொகுதிகளிலும் ராஜேந்திர பாலாஜி செய்திருக்கும் அரசியல் அவரது ஆதரவாளர்களை உற்சாகமாக்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்யை ராஜேந்திர பாலாஜி அடித்துவிட்டதாக பெருமிதம் பேச தொடங்கி இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய பவர் சென்டராக இருந்து வருகிறார். இவரை மீறி விருதுநகர், தென்காசி மாவட்டத்தில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார். இதன் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் மோதல் ஏற்பட்டது.

தற்போது கெளதமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ராஜபாளையம் தொகுதியையும் ஜான் பாண்டியன் பக்கம் திருப்பிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாகவே நடிகை கெளதமி பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
இதனை அறிந்து கொண்டே ராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு கொடுக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார். ஏனென்றால் சாத்தூர் தொகுதி பாஜக பக்கம் சென்றதிலும் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சாத்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிட பணிகளை மேற்கொண்டு வந்தார். அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தை கூட ஒருங்கிணைத்தது ராஜவர்மன் தான். மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடமும் ராஜவர்மன் பேசி இருந்தார்.
ஆனால் சாத்தூர் எம்எல்ஏ-வாக ராஜவர்மன் இருந்த போது, அவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ராஜேந்திர பாலாஜி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி பாஜக பக்கம் தாவினார். இதனால் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதிக்கு மாறுவதால், ராஜபாளையம் தொகுதி நமக்கு வரும் என்று கோபால்சாமி நம்பினார்.
ஆனால் சாத்தூர் தொகுதியை பாஜக பக்கமும், ராஜபாளையத்தை ஜான் பாண்டியனுக்கும் ஒதுக்கி ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறார். அதேபோல் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பவர் சென்டராகவும் ராஜேந்திர பாலாஜி மீண்டும் உருவாகி இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications