மக்கள் முன்னிலையில் திடீரென கண்ணீர் வடித்த சரத்குமார்... தேற்றிய ராதிகா.. .பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென மக்கள் முன்னிலையில் சரத்குமார் கண்ணீர் வடித்தார். அப்போது அவர் தந்தையின் நினைவால் கண்ணீர் பெருக்கெடுத்ததாக உருக்கமாக பேசினார்.
Recommended Video
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்த கூட்டணி அமைத்துள்ளார். அவர் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே மற்றும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில். விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்கு தேவை. எங்கள் கூட்டணி மக்களின் முதல் கூட்டணி. ஒத்த கருத்துக்கள் உடையவர்களுடன் நாங்கள் இணைந்தால் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்க முடியும் என்று கருதினோம்

தூண்டில் தரலாம்
மாற்றத்தை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணிக்கு புதிய முயற்சிக்கு மக்கள் வாய்ப்பு தர வேண்டும். பணம் கொடுப்பவர்கள் தான் ஆட்சி, அரசியலுக்கு வர முடியும் என்றால் அது ஜனநாயகம் இல்லை. இலவசத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் யாருக்கு, எதற்கு தேவை என்பதை தான் எதிர்க்கிறோம். தூண்டில் வாங்கி கொடுக்கலாம் - ஆனால் மீன் பிடித்து கொடுக்க கூடாது.

நல்ல திட்டங்கள் வைத்துள்ளோம்
பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தருவோம் என்று வலியுறுத்தி உள்ளோம். தொலை நோக்குடன் திட்டங்களை வைத்துள்ளோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் . கூட்டத்திற்கு குவாட்டர், பிரியாணி தர மாட்டோம். 2 பேர் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்திறமை இருந்த காரணத்தினால் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியே தெரிந்தார் அதே போன்று தான் எங்களிடம் திறமை உள்ளது. வாய்ப்பு கொடுங்கள்

ஓட்டுக்காக பணம்
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தயவு செய்து வாங்க வேண்டாம்- காலில் விழுந்து கேட்கிறேன். உங்களிடம் பணம் கொடுத்து விட்டு வேறு வழியில் வாங்கி விடுவோம் என்று அமைச்சர் கூறியுள்ளதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓட்டுக்கு கொடுக்கும் காசு பிச்சைக்காசு, அது திருட்டு காசு தயவு செய்து வாங்க வேண்டாம்" இவ்வாறு கூறினார்.

சரத்குமார் கண்ணீர்
இதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் மநீமகூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்தும் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த சரத்குமார், திடீரென மக்கள் முன்னிலையில் கண்ணீர் வடித்தார். அப்போது அவர் தந்தையின் நினைவால் கண்ணீர் பெருக்கெடுத்ததாக உருக்கமாக பேசினார். அவருடன் வந்த ராதிகா சரத்குமார் அவரை தேற்றினார். இந்த காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications