சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா
திருநெல்வேலி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் இந்த முறை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கடந்த முறை திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் இந்த முறை சாத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார். அவரை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் 'ஸ்கெட்ச்' போட்டு 2 முக்கிய மூவ் செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்த முறை நயினார் நாகேந்திரன் தொகுதி மாறி போட்டியிடுகிறார்.

திருநெல்வேலிக்கு பதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டசபை தொகுதியில் நயினார் நாகேந்திரன் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் முக்குலத்தோர் ஓட்டுகள் அதிகம் உள்ளது. நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் விருதுநகரில் போட்டியிட்டுள்ளார்.
யாரெல்லாம் சாத்தூரில் போட்டி?
மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நயினார் நாகேந்திரன் தொகுதி மாற முடிவு செய்து சாத்தூரில் களப்பணியை தொடங்கி தற்போது அங்கு களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் திமுக சார்பில் கடற்கரை ராஜ் களமிறங்கி உள்ளார். நாம் தமிழர் சார்பில் ஆனந்த ராஜ் என்பவரும், தவெகவில் அஜித் என்பவரும் போட்டியிட்டுள்ளார்.
இதுதவிர நயினார் நாகேந்திரனை அரசியலில் வளர்த்துவிட்ட சசிகலா தற்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளார். சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிஎம்டியின் இசக்கி ராஜா களமிறங்கி உள்ளார்.
ஸ்டாலின் திட்டம் என்ன?
இந்நிலையில் தான் நயினார் நாகேந்திரனை வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் பிளான் போட்டுள்ளார். அவர் பாஜக மாநில தலைவராக உள்ள நிலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். இதனால் தான் நேரடியாக இந்த தொகுதியில் திமுக களமிறங்குகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதி திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. மதிமுகவின் ரகுராமன் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்பதை அறிந்த திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது. அதோடு நயினார் நாகேந்திரனை வீழ்த்த 2 முக்கிய மூவ்களை ஸ்டாலின் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் மேட்டர்
இதில் முதல் விஷயம் என்னவென்றால் இங்கு நயினார் நாகேந்திரனை வீழ்த்தும் பொறுப்பு வருவாய்த்துறை அமைச்சராக இருக்கும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுகவில் இருந்து திமுக சென்றவர். அதோடு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
ஆனால் அவர் அரசியலில் வளர்ந்தது எல்லாம் சாத்தூர் சட்டசபை தொகுதியை வைத்து தான். சாத்தூர் என்பது கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் பழைய தொகுதியாகும். இவர் அதிமுகவில் இருந்தபோது 1977, 19801984, 1991, 1996 ஆகிய தேர்தல்களில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் 1996 தேர்தலில் மட்டும் தோல்வியடைந்த அவர் பிற தேர்தல்களில் வெற்றி பெற்றார். பிறகு திமுகவில் சேர்ந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் 2001, 2006 தேர்தல்களில் சாத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தான் அவர் அருப்புக்கோட்டை தொகுதிக்கு மாறினார்.
2வது மேட்டர்
இதனால் சாத்தூர் தொகுதியின் களநிலவரம் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு நன்கு தெரியும். இதனால் நயினார் நாகேந்திரனை வீழ்த்தும் பொறுப்பு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 2வது கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தான். திமுக சார்பில் கடற்கரை ராஜ் என்பவர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் தீவிர ஆதரவாளர்.
வெறுமனே நயினார் நாகேந்திரனை வீழ்த்தும் பொறுப்பு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு வழங்கினால் அவர் சுணக்கம் காட்டலாம். ஏனென்றால் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு 79 வயது ஆகிறது. இதனால் அவர் 2 தொகுதிகளில் கவனம் செலுத்தாமல் தனது வெற்றியை மட்டுமே முன்னிறுத்தி செயல்படலாம். அதேவேளையில் அவரது ஆதரவாளருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தொகுதியில் இறங்கி வேலை செய்வார் என்பதை ஸ்டாலின் அறிந்து கடற்கரை ராஜ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விடாத நயினார் நாகேந்திரன்
திமுக இப்படி காய் நகர்த்தினாலும் கூட நயினார் நாகேந்திரனும் விடாமல் செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் சாத்தூரில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அவரது 2 மகன்களும் தொகுதியில் களப்பணியை தொடங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் சாத்தூர் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கள நிலவரம் இப்படி இருந்தாலும் கூட இந்த தொகுதியில் யார் வெல்வார்கள்? என்பதை அறிய மே 4ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications