"சிஎம் தாத்தா.. சீக்கிரம் பாலம் கட்டுங்க தாத்தா" மழலை மொழியில் முதல்வருக்கு கோரிக்கை வைத்த சிறுமி!
ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சிறுமி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மழலை மொழியில் சிறுமி ஒருவர் கோரிக்கை வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக மாணவர்களுக்கு என்று சிறப்பு கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு ஏற்ப ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அனுப்பியது வரவேற்பை பெற்றது.

குழந்தைகளும் முக ஸ்டாலினும்
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தைகளுக்கு நன்றி கூறியதோடு, அவர்களின் ஆசையையும் நிறைவேற்றினார். அப்போது முதலே குழந்தைகள் பலரும் மு.க.ஸ்டாலினை தாத்தா என்று அழைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு, அதனை விரிவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்கள்
அதேபோல் மாணவர்களை சந்தித்து அவ்வப்போது உரையாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மழலை மொழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மழலை மொழியில் கோரிக்கை
அந்த வீடியோவில், சிஎம் தாத்தா, நான் சிவகாசியில இருந்து பேசுகிறேன். எங்க சிவகாசியில சீக்கிரம் பாலம் கட்டிக்கொடுங்க. நான் டெய்லியும் ஸ்கூல்-க்கு லேட்டா போறேன் தாத்தா. ரயில்வே கேட் போட்டுறாங்க தாத்தா என்று கோரிக்கை வைத்துள்ளார். சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால், ரயில்கள் கடப்பதற்காக தினமும் பல முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது.

ரயில்வே மேம்பாலம்
இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வேலைகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதே தீர்வாக இருக்கும் என்று பொதுமக்களால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் கொஞ்சும் மழலை மொழியில் சிவகாசியைச் சேர்ந்த சிறுமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications