சிவகாசியில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலைகள்.. 13 பேர் உடல் கருகி பலி.. முதல்வர் இரங்கல்
விருதுநகர்: சிவகாசி அருகே இருவேறு இடங்களில் பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று கிச்சநாயக்கன்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டது. மணி மருந்து குடோனில் ஏற்பட்ட விபத்தில் அங்கு வேலை செய்தவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அறைக்குள் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே பட்டாசு வெடி விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் எம்.புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விபத்து நிகழ்ந்தது எப்படி என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாயில்பட்டியை அடுத்த மண்குண்டாம்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அரியலூர் அருகே கடந்த வாரம் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டு இடங்களில் நிகழ்ந்த வெடி விபத்தில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், மாரனேரி கிராமம், கிச்சநாயக்கன்பட்டி மற்றும் சிவகாசி வட்டம், மங்களம் கிராமம் ஆகிய இருவேறு இடங்களில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைகளில் இன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications