ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் விழா - கோவில் வளாகத்தில் 5 கருடசேவை
ஸ்ரீவில்லிபுத்தூர்: பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் நடைபெறும் 5ஆம் நாளன்று 5 கருட சேவை கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற கருடசேவையில் பட்டர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஐந்தாம் திருநாள் அன்று நடக்கும் ஐந்து கருட சேவை, ஏழாம் திருநாள் அன்று நடக்கும் சயன சேவை உள்ளிட்டவைகள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோவில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோவில் வளாகத்திலேயே திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடிப்பூர விழா திங்கட்கிழமை ஐந்தாம் நாளை எட்டியுள்ளது.
வழக்கமாக ஐந்தாம் திருநாளில்ஆடிப்பூரம் ஸ்ரீ ஆண்டாள் அன்ன வாகனத்தில் எழுந்தருள ஸ்ரீ ரெங்க மன்னார்,ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள்,ஸ்ரீ திருத்தங்கால் அப்பன் எழுந்தருள பெரியாழ்வார் எதிர் சேவை நடைபெற்றது.
கருடவாகனத்தில் வந்த சுவாமிகள் கோவில் வாசல் வரை வந்துவிட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கோயில் ஸ்தலத்தார் மற்றும் அதிகாரிகள் மட்டுமே சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். கோவில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றதால் சுமார் 5 மணி நேரம் நடைபெற வேண்டிய ஐந்து கருட சேவை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் நிறைவடைந்தது.
ஏழாம் திருநாளான்று சயன சேவை நடைபெறும் ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு. வரும் 24ஆம் தேதியன்று தங்கத்தேரோட்டம் கோவில் வளாகத்தில் நடைபெறும். ஆண்டாள் அவதார தினமான ஆடி பூரம் நட்சத்திர நாளில் திருத்தேரோட்டத்தை காண்பதன் மூலம் கல்யாண தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.