மத்திய அரசை எதிர்க்க துணிவில்லாத எடப்பாடி அரசு ஆட்சியில் நீடிக்க கூடாது.. நல்லகண்ணு கருத்து
விருதுநகர்: வட இந்திய மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு ,தமிழுக்கு கொடுப்பதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான நல்லகண்ணு கூறியுள்ளார்.
மும்மொழி திட்டம் என்ற புதிய கல்விக் கொள்கை, இந்தியை திணிக்கும் முயற்சி தான் என குறிப்பிட்டுள்ளார். திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவுகிறது.
தமிழகத்தை ஆட்சி செய்யும் அதிமுக அரசு இயற்கை வளத்தை சூறையாடி வருகிறது. தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் மண் முதல் மலைவரை கொள்ளையடிக்கப்படுகிறது. ஏரிகள்,குளங்கள், கிணறுகள் வறண்டுள்ளன. தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு துணை போவது கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே இத்திட்டங்களையும் கைவிட வேண்டும் என்றார்
நீட் தேர்வால் ஆண்டுதோறும் தமிழகத்தில் உயிர் பலி ஏற்படுகிறது. நீட் தேர்வை தமிழகமே ஒருமித்த குரலில் எதிர்க்கிறது. இவ்விகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நாங்கள் மோடியை எதிர்க்கவில்லை அவரின் கொள்கைகளை தான் எதிர்க்கிறோம். பாஜக-வின் மதவெறியை எதிர்க்கிறோம்.
தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மத்திய அரசை எதிர்க்க துணிவில்லாமல் உள்ளார்கள். மத்திய அரசின் தயவில் தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே தமிழத்திற்கு எந்த நல திட்டங்களையும் நிறைவேற்றாத எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்க கூடாது என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது கவலை அளிக்கிறது. 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.