5,000 வருடங்களுக்கு முன்பே இரும்பு..தமிழர் பெருமையை வெளி கொணர்ந்த சிவகளை! தங்கம் தென்னரசு! பெருமிதம்
விருதுநகர்: கீழடி தமிழ் மொழியின் தொன்மையை வெளிப்படுத்திய வேளையில், சிவகளை தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது எனவும், 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்பத்தை அறிந்து படைக்கலன்களையோ அல்லது உழவுத் தொழிலுக்கான கருவிகளை உருவாக்கியது தமிழ் சமுதாயம் என கூறியுள்ளார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் - ஒரு வரலாற்றுப் பயணம் (1800-1950)நூலை தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வரலாறை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? வரலாறு என்பது முடிந்து போன ஒரு காலம்.

ஆனால் முடிந்து போன ஒரு காலத்தை ஏன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமக்கு எதிரே சவால்கள் மிகுந்த எதிர்காலம் இருக்கின்றது. நாம் நீந்தி கடக்க வேண்டிய நிகழ்காலம் இருக்கின்றது. இதற்கிடையே நாம் கடந்த காலத்தை குறித்த தேடல்களில் ஏன் செல்ல வேண்டும் என்கின்ற கேள்வி நமக்கு எழலாம்.
வரலாற்றை மறந்த ஒருவன் நினைவிழந்தவனாக இருப்பான் என்று ஒரு வரலாற்று பேராசிரியர் கூறிய பதில்தான் நினைவுக்கு வருகிறது. கடந்த காலத்தில் நாம் என்னவாக இருந்தோம் என்பதை நாம் அறிந்து கொண்டால் தான் எதிர்காலத்தில் நாம் என்னவாக இருக்க போகிறோம் என்பதை நம்மால் உறுதியோடு திட்டமிட்டு கொள்ள முடியும். நமது மொழி மற்றும் மண்ணின் பெருமையில் இருந்து உத்வேகம் பெற்று எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை படைப்பதற்கு வரலாற்றை அறிவது அவசியம்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு வருடங்களிலே நாம் பண்பாட்டுத்தளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மொழியின் தொன்மையை குறித்து கீழடி நமக்கு எடுத்துச் சொன்னது. குடியின் தொன்மையை குறித்து அதிரம்பாக்கம் நமக்கு நிறைய சொன்னது. தொழில் அறிவு, தொழில் நுட்ப அறிவு என்பதற்கு மயிலாடும்பாறையில் கிடைத்திருக்கக் கூடிய சான்றுகளையும் தாண்டி சிவகளையினுடைய முடிவுகள் இந்திய துணைக்கண்டத்தில் இரும்பினுடைய பயன்பாட்டை எடுத்துரைத்துள்ளது.
5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்பத்தை அறிந்து படைக்கலன்களையோ அல்லது உழவுத் தொழிலுக்கான கருவிகளை உருவாக்கியது தமிழ் சமுதாயம். இரும்பின் பயன்பாடு வந்ததற்கு பிறகு தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போக முடிந்தது. நாம் இரும்பு காலத்தில் இருக்கக் கூடிய சமயத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தினர் செம்பு காலத்தில் இருந்துள்ளனர். இரும்பு செம்பை விட வலுவானது என்கின்ற காரணத்தால் நாம் இரும்பை கண்டுபிடிக்க வேண்டும் இந்த நாட்டை அடுத்த கட்ட தொழில்நுட்பத்திற்கு நாம் உயர்த்த வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் எண்ணியுள்ளனர்.
வைகை, பொருனை ஆற்று நாகரீகத்திற்கு சற்றும் குறைவில்லாதது நமது வைப்பாற்று நாகரீகம் என்பதை வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாய்வு நிரூபித்துள்ளது. நமது திராவிட மாடல் ஆட்சியில், மாநிலம் முழுவதும் தொல்லியல் துறை மேற்கொள்ளும் அகழாய்வின் மூலம் தமிழர்களின் பண்பாடும், கடந்த காலமும் கண்டறியப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ் மொழியின் தொன்மையை வெளிப்படுத்தும் வேளையில், சிவகலை அகழ்வாராய்ச்சி 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் கலாசார சாயல்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் விருதுநகர் மாவட்டம் தொழில், வணிகம், தொல்லியல், இலக்கியம் என தனித்த அடையாளத்தைக் கொண்டிருந்தது” எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications