"ஆடி அமாவாசை தரிசனம்".. சதுரகிரி கோவிலில் மலை ஏற யாருக்கு அனுமதியில்லை? பக்தர்களே கவனம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்னமி தினங்களையொட்டி மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையி் தான் தற்போது சதுரகிரி கோவிலில் மலையேற பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த மலையின் மீது சுந்தர மகாலிங்கசுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலுக்கு பக்தர்கள் அனைத்து நாட்களும் பக்தர்கள் செல்ல முடியாது.

மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி மட்டும் சில நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அன்றைய தினங்களில் மட்டுமே பக்தர்கள் மலை மீது ஏறி சுவாமியை வழிபட முடியும். இந்த கோவிலை இந்து அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது.
மேலும் கோவிலுக்கு செல்லும் இடம் என்பது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்கள் வழிபாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதோடு மலை ஏறி செல்லும் பாதைகளும் ஆபத்து நிறைந்தவை. பாதைக்கு நடுவே ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் என்பது இருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் பக்தர்கள் மலை ஏறும்போது கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் வழக்கமான அமாவாசை, பவுர்ணமியை விடுத்து ஆடி அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாட்களுக்கான தரிசனம் என்பது மிகவும் விசேஷமானது. இதனால் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மலை ஏறுவார்கள். இந்நிலையில் தான் ஆடி அமாவாசை நெருங்கி வரும் சூழலில் 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 1 முதல் 5 வரையிலான ஐந்து நாட்களுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம்.
இந்நிலையில் தான் சதுரகிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சதுரகிரி மலைக்கு 10 வகையான பாதிப்பு உள்ள மக்கள் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தோர், ரத்த நேயாளிகள், அல்சர் பாதிப்பு உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் மாற்றுத்திறனாளிகள், அதிக வயதானவர்கள், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும். இந்த வகை உடல் உபாதை கொண்ட பக்தர்கள் யாரும் மலை ஏற வேண்டாம். அடிவாரத்தில் இருந்தோ அல்லது கருப்பசாமி கோவிலில் இருந்தோ சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை வழிபாடு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications