ரயில் படியில் அமர்வதில் தகராறு.. சண்டை முற்றி கீழே விழுந்த 2 பேர் பலி.. விருதுநகர் அருகே பயங்கரம்!
விருதுநகர்: நாகர்கோவில் - கோவை ரயிலில் சென்ற பயணிகள் இடையே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வதில் மோதல் ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயில், விருந்துநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் இருந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர். படிக்கட்டில் பயணம் செய்வதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்த மோதலில் இருவரும் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் நாகர்கோவில் - கோவை ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில் கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈரோடு செல்வதற்காக பயணம் செய்துள்ளார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி சண்டை போட்டுக்கொண்டதில், ரயிலின் படியில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன சக பயணிகள் உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயிலில் இருந்து கீழே விழுந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தவறி விழுந்த மாரியப்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
ரயில் சென்று கொண்டிருக்கும்போதே படிக்கட்டில் அமர்வது தொடர்பான சண்டையில் 2 பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி சரக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications