Corona: பரப்பன அக்ரஹார சிறையில் எனக்கு திட்டமிட்டு கொரோனா பரப்பினார்கள்! சசிகலா பகீர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அஇபுதமமுக கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, தனக்கு சிறையில் இருந்த போது கொரோனாவை திட்டமிட்டு பரப்பியதாக பகீர் தகவலை அளித்துள்ளார்.
அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடிய நிலையில் அது முடியாததால் அவர் தனி கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். அந்த கட்சிக்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயரிட்டுள்ளார். அந்த கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் ராமதாஸ் அணியுடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதனால் சொந்த கட்சி, ராமதாஸ் அணி வேட்பாளர்களை ஆதரித்து சசிகலா பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது தனக்கு திட்டமிட்டு கொரோனாவை பரப்பினார்கள் என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறையில் சென்ற சமயத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென ஒருவரை முதல்வராக்கிவிட்டு போனேன். அதுதான் நான் பண்ணது. ஆனால் 3 மாதத்திற்குள் என்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இன்று வரைக்கும் அது என்ன விஷயம்ன்னு எனக்கு தெரியவில்லை.
சிறைச் சாலையில் இருந்த போது எதுக்காக இதை செய்தார் என்றே தெரியவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு நான் வெளியே வந்தேன். எனக்கு கொரோனா வந்துவிட்டது. சிறைச்சாலையில் பெண்கள் பகுதியில் யாருக்கும் கொரோனா இல்லை. திடீரென ஒரு பெண் என் வார்டுக்குள் வந்தாங்க. அவுங்கள சிறையில் நான் பார்த்ததே இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண், எப்படி உள்ள வந்தாங்கன்னு கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
மறுநாளில் இருந்து எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிருச்சு. சிறைச்சாலைல 200 பேருக்கு மேல் இருக்கோம். எனக்கு மட்டும் கொரோனா பாதிப்பு. 85% எனக்கு கொரோனா வந்தது. அதிலிருந்து நான் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என மிகவும் வேதனையுடன் பேசியுள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் இருந்த சமயத்தில் திட்டமிட்டு தனக்கு கொரோனா பரப்பப்பட்டதாக சசிகலா பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்திய சசிகலா பரபரப்பை செய்து வருகிறார். ஏற்கனவே திமுக, தன்னை முதல்வர் ஆக்கியவருக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி என பிரச்சாரம் செய்து வருகிறது. இதனிடையில் சசிகலாவும் கட்சி துவங்கி அவருக்கு எதிராக பரப்புரை செய்து வருவது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications