65 வருஷமா 'நோ' தீபாவளி.. 3 தலைமுறையாக தீபாவளியை தவிர்த்து வரும் 13 கிராம மக்கள்! காரணத்தை பாருங்க
விருதுநகர்: நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து வருகின்றனர். இந்த முறையும் அவர்கள் தீபாவளியை கொண்டாடபோவதில்லை என அறிவித்துள்ளனர். இதற்கான காரணமும் விசித்திரமாக இருக்கிறது.
தீபாவளி என்றாலே ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி வந்துவிடும். பட்டாசுகள், பலகாரங்கள், புது துணிகள் என தீபாவளிக்காக குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பு இருந்தே மக்கள் தயாராகிவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, ஆண்டின் பண்டிகை காலத்தின் தொடக்கம் தீபாவளியாகத்தான் இருக்கும். தீபாவளியில் தொடங்கும் கொண்டாட்ட மனநிலை பொங்கல் வரை நீடிக்கும். அந்த வகையில் தீபாவளி எப்போதும் ஸ்பெஷல்தான்.

ஆனால் சில காரணங்களுக்காக தீபாவளியை ஒரு சில கிராமத்தினர் கறாராக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் காடுகள், சதுப்பு நிலங்களை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாடுகின்றனர். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 65 ஆண்டுகளாக தீபாவளியை கொண்டாடாமல் தவிர்த்து வந்திருக்கின்றனர். இதற்கு பறவைகள் காரணமல்ல.
தங்களது முன்னோர்கள் தீபாவளியை கொண்டாட கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்ததால் இனி தீபாவளியை கொண்டாடவே கூடாது என்று தீர்மானம் போட்டு 1958ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்த பண்டிகைளை கொண்டாடாமல் இந்த கிராமத்தினர் தவிர்த்து வருகின்றனர். இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில்,
"மத்தவங்களுக்கு எப்படினு தெரியல, ஆனா எங்களுக்கு எப்பவும் தீபாவளி கிடையாது. நாங்க மொத்தம் 13 கிராமத்துல இருக்கிறோம். இங்க இருக்குறவங்க மட்டும் இல்லாம, எங்க ஊரை சேர்ந்தவங்க எந்த வெளியூர்ல இருந்தாலும் அவங்க தீபாவளியை கொண்டாட மாட்டாங்க. மூன்று தலைமுறையா நாங்க இப்படித்தான் இருக்கிறோம். இதுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கு.
வழக்கமாக தீபாவளி அப்போ மழை பெய்யும். மழை பெய்யும்போதுதான் நிலத்துல வேலை இருக்கும். நாத்து நடுறது, களை எடுக்குறது, உரம் போடுறது அப்படினு வேலை டைட்டா இருக்கும். அந்த நேரத்துல கையில பணம் ஏதும் இருக்காது. பணம் இல்லாம தீபாவளி எப்படி? அதனால எங்க முன்னோர்கள் கடன் வாங்கி தீவாபளியை கொண்டாடினாங்க.
ஆனா அந்த கடனை சரியா அடைக்க முடியல. இதனால் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அப்புறம் ஒருகட்டத்துல 13 கிராமங்களை சேர்ந்த ஜனங்க எல்லாம் மாம்பட்டியில ஒன்னு சேர்ந்து உட்கார்ந்து பேசி இனி தீபாவளியே வேணாம் என முடிவு செஞ்சிட்டாங்க. இந்த முடிவால எங்க கிராமங்கள் எல்லாம் கடன் பிரச்னை இல்லாம சிறப்பா இருந்துச்சு.
தீபாவளிக்கு பதில் நாங்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமா கொண்டாடுவோம். பொங்கல் சீசனுலதான் அறுவடை, புது நெல் வந்துடும். புது நெல் வந்தா புது உற்சாகம் வந்த மாதிரி. பணமும் கையில இருக்கும். எனவே பொங்கல்தான் இனி எங்க பண்டிகையினு முடிவு செஞ்சு மூணாவது தலைமுறை வரைக்கும் இதையேதான் பின்பற்றி வறோம்" என்று கூறியுள்ளனர். தீபாவளியை கொண்டாடாமல் தவிர்க்கும் மாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்களின் காரணம் விசித்திரமானதாக இருந்தாலும், நியாயமானதாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications