என்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி
Recommended Video

விருதுநகர்: எச்ஐவி நோய் தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றியதற்கு பதில் எனக்கு விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாமே என விருதுநகர் கர்ப்பிணி பெண் அழுது கொண்டே கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அனுமதி
2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதில் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவரின் ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது. இதனால் அவர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கணவரிடம் கூறினேன்
இதுகுறித்து எச்ஐவி நோய் தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் எனக்கு ரத்த பரிசோதனை எடுத்தனர். நான் எதற்கு என கேட்டதற்கு எப்பவும் எடுப்பதுதான் என்றார்கள். மறுநாள் எனது கணவருக்கும் ரத்தப் பரிசோதனை எடுக்க வேண்டும், அதனால் அவரை வரசொல்லுங்கள் என்று கூறினர். நானும் என் கணவரிடம் கூறினேன்.

ஒதுக்கி வைப்பது
ரத்த பரிசோதனை எடுத்தவுடன் எனக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக என்னிடம் வந்து சொன்னார்கள். மிகவும் மனவேதனை அடைந்தேன். இந்த வியாதியை எனக்கு கொடுத்தது தமிழக அரசுதான். நான் தெருவில் நடக்கும் போது என்னை பிறர் பார்ப்பது என்னை ஒதுக்கி வைப்பது போல் இருக்கிறது.

தாயுள்ளத்துடன்
நான் சிறுவயதில் இருந்து ஒரு ஊசி கூட போட்டதில்லை. இது போல் எச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய அரசு, அதற்கு பதில் எனக்கு விஷம் ஊசி போட்டு கொன்றிருக்கலாம். இது தொடர்பான அனைத்து அதிகாரிகள் மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்களை யாரும் ஒதுக்க வேண்டாம். எங்களுக்கு தாயுள்ளத்துடன் மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தலைநிமிர்ந்து நடக்க முடியாத நோய்
செய்யாத தவறுக்கு எங்களுக்கு ஏன் இந்த தண்டனை. இது போன்று யாருக்கும் நடைபெறக் கூடாது என்றார். இந்த பேட்டியை அளிக்கும்போதே அவர் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் பெண்ணின் கணவர் கூறுகையில் எச்ஐவி நோய் என்பது சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியாத வகையிலான நோயாகும். நான் நல்லவன் என்ற ரிப்போர்ட்டை நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்ல முடியுமா, காண்பிக்க முடியுமா.

தவறை செய்யவில்லை
தமிழக மக்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. மற்ற யாருக்கும் இதுபோன்ற பாதிப்பு வரக் கூடாது. நோயை நாங்கள் பரப்பியிருந்தால் நாங்களும் கொலையாளிதான். நாங்கள் இருவரும் எந்த தவறையும் செய்யவில்லை. எங்களை அறியாமல் இந்த நோயை நாங்கள் யாருக்காவது பரப்பியிருந்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்தானே என்றார்.












Click it and Unblock the Notifications