"75% அமெரிக்கர்கள் டிஸ்மிஸ்!" மஸ்க் வழியில் விவேக் ராமசாமி! மெகா பிளான் போடும் தமிழர்! பெரிய சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட இந்திய-அமெரிக்கரான விவேக் ராமசாமி முனைப்புக் காட்டி வரும் நிலையில், அவர் எலான் மஸ்குடன் இணைய உள்ளதாகக் கூறியது டிரெண்டாகி வருகிறது.
அமெரிக்காவில் அடுத்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பிரதான எதிர்க்கட்சியாகக் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.

குடியரசு கட்சியினர் மத்தியில் அவருக்கான செல்வாக்கு வேற லெவலில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அவர் உலகின் டாப் கோடீஸ்வரரான எலான் மஸ்குடன் கைகோர்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கத் தேர்தல்: அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விவேக் ராமசாமி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் அதிபராக வென்றால்.. யார் உங்களது ஆலோசகராக இருக்க வேண்டும் என்று கேட்டனர். அதற்கு விவேக் ராமசாமி சற்றும் யோசிக்காமல் எலான் மஸ்க் தான் தனக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "எலான் மஸ்க்கை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்ற போதிலும் சமீப காலத்தில் தான் அவர் குறித்து நான் கூடுதலாக அறிந்து கொண்டேன்.. அவர் ட்விட்டரில் பணியாற்றிய 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் அவர் என்னுடைய ஆலோசகராக இருந்தால் ரொம்பவே சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் எடுத்த பணிநீக்க நடவடிக்கைக்குப் பின்னரே ட்விட்டரின் செயல்திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
யார் இவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான விவேக் ராமசாமி ரோவண்ட் சயின்ஸ் என்ற நிறுவனத்தைக் கடந்த 2014இல் ஆரம்பித்தார். அவரது நிறுவனம் பங்குச்சந்தையிலும் வேற லெவலில் உள்ளே வந்தது. அவரது நிறுவனம் உருவாக்கிய பல மருந்துகள் அங்குப் பல முக்கிய நோய்களுக்குத் தீர்வாக அமைந்தது.. இதனால் அவரது நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் மேலும் மேலும் உயர்ந்தது.
மறுபுறம் 52 வயதான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும், அவர் கடந்தாண்டு தான் ட்விட்டர் தளத்தையும் வாங்கியிருந்தார். ட்விட்டர் தளத்தை அவர் வாங்கியது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக முதலில் தலைமை பொறுப்பில் இருந்தவர்களை நீக்கிய எலான் மஸ்க் அதன் பிறகு 4இல் 3 பங்கு ஊழியர்களை நீக்கினார். அதைக் குறிப்பிட்டே இப்போது விவேக் ராமசாமி பேசியுள்ளார்.
எலான் மஸ்க்: விவேக் ராமசாமி இது தொடர்பாக மேலும் கூறுகையில், "அவர் ட்விட்டரில் செய்ததை உண்மையாகவே நாம் பாராட்ட வேண்டும். அவர் பல துணிச்சலான முடிவுகளை எடுத்தார். இதன் மூலம் ட்விட்டரின் செயல்திறன் உயர்ந்தது. அவர் ட்விட்டரில் செய்ததை நான் அரசுக்குச் செய்ய விரும்புகிறேன். அவர் அங்குச் செய்த விஷயம் பலருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.
தேவையில்லாத 75 சதவீத ஊழியர்களை அவர் நீக்கியுள்ளார். அது ட்விட்டரில் நமது அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறது. அவர் ட்விட்டரில் சிறிய அளவில் இதைச் செய்தார். இதையே நான் பெரியளவில் அரசு நிர்வாகத்தில் செய்ய உள்ளேன். இதன் மூலம் எனக்கும் எலான் மஸ்கிற்கும் தொடர்பு இருக்கிறது என்று கூடச் சொல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.
விவேக் ராமசாமி: குடியரசு கட்சியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, தான் அதிபர் பதவிக்கு வந்தால் கல்வித் துறை, எப்.பி.ஐ, ஆல்கஹால், புகையிலை, துப்பாக்கி கட்டுப்பாட்டுத் துறை என பல்வேறு துறைகளையும் மூட உள்ளதாகவும் அவர் வெளிப்படையாகவே சொல்லி வருகிறார்.
38 வயதான விவேக் ராமசாமி, அங்கு இளம்வயதில் டாப் பணக்காரராக உயர்ந்த ஒருவராக இருக்கிறார்.. யேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்த அவர், ஹார்வர்டில் உயிரியல் படிப்பையும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அமெரிக்காவில் பிறந்தவர் என்ற போதிலும், இவரது பெற்றோர் இந்தியாவில் பிறந்தவர்கள். அவர்கள் கேரளாவில் வசித்த தமிழ் பிராமணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரை பொறுத்தவரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய போது அதில் 8,000+ ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். பல்வேறு கட்டங்களாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிய எலான் மஸ்க், ட்விட்டர் ஊழியர்கள் எண்ணிக்கையை 1,500 ஆகக் குறைத்தார். மேலும், ட்விட்டர் நிறுவனத்தையும் எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்த அவர், அதில் இருந்து வருவாய் ஈட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications