கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட 4 இந்தியர்களும் கொலை.. நடந்தது என்ன?
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 மாத குழந்தை உள்பட கடத்தப்பட்ட 4 இந்தியர்களும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மெர்சிட் கவுண்டியை சேர்ந்தவர் ஜஸ்தீப் சிங் (27). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27). இவர்களுடன் 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்கள் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரில் உள்ள ஹர்சி பிண்டி பகுதியை சேர்ந்தவர்களாவர். இவர்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் வணிக வளாகம் ஒன்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்.
'அமெரிக்காவில் 25% தலித்களுக்கு ஜாதி பாகுபாடு நடக்கிறது'.. கலிபோர்னியா பல்கலை முன்னாள் மாணவர் வேதனை
4 பேரும் கடத்தல்
அப்போது இவர்கள் 4 பேரும் கத்திமுனையில் கடத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மெர்சிட் கவுண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தது.
குற்றவாளி
இதைவைத்து குற்றவாளியை கலிபோர்னியா போலீஸார் நெருங்கிய போது அந்த நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த 4 பேரையும் கடத்தியவர் 48 வயதான ஜீசஸ் சல்காடோ என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குற்றவாளியை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடை நடத்தியவர்கள்
விசாரணையில் கடத்தப்பட்டவர்கள் அங்கு பெட்ரோல் நிலையத்தையும் ஒரு மளிகைக் கடையையும் வைத்து நடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களது கடைக்கு வந்த கடத்தல்காரன் துப்பாக்கி முனையில் முதலில் குழந்தையை கடத்தினாராம். பின்னர் குழந்தையின் தாய், தந்தை, உறவினர் ஆகியோரையும் கடத்தியுள்ளது தெரியவந்தது. கடத்தல்காரரிடம் இருந்து பணம் உள்ளிட்ட எவ்வித கோரிக்கையையும் கடத்தல்காரன் விடுக்கவில்லையாம்.
4 பேரும் சடலம்
இந்த விசாரணையில் இத்தனை தகவல்கள் கிடைத்தும் கடத்தப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட 4 பேரும் கலிபோர்னியாவில் ஒரு பழத்தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் வழக்கை கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர். இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.