எமனாக மாறிய பிஸ்கட்.. சாப்பிட்ட அடுத்த நொடி உடல் முழுக்க பரவிய அலர்ஜி.. பெண் பரிதாபமாக பலி.. பகீர்
வாஷிங்டன்: ஆசையாக பிஸ்கட் சாப்பிட்ட பெண் ஒருவருக்கு திடீரென அலர்ஜி ஏற்படவே அவர் பரிதாபமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக ஒருவருக்கு மரணம் எப்போது.. யார் மூலம் வரும் என்றே தெரியாது என்பார்கள். நன்றாக இருந்தவர்கள் கூட நொடிப்பொழுதில் உயிரிழந்த சம்பவங்கள் எல்லாம் இங்கு நடந்துள்ளது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பிரிட்டனில் இப்போது நடந்துள்ளது.

வேர்க்கடலை: பொதுவாக வெளிநாடுகளில் வேர்க்கடலை என்பது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அவர்கள் தப்பித் தவறி வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும். அப்படி கடுமையான வேர்க்கடலை அலர்ஜியுடன் அவதிப்பட்டு வந்த பாலே நடனக் கலைஞர் தான் பிஸ்கட் சாப்பிட்டதால் இப்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த பிஸ்கட் பேக்கிங்கில் அதில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதுவே அவரது உயிரைப் பறித்துள்ளது. பிரிட்டனை நாட்டை சேர்ந்த ஓர்லா பாக்செண்டேல் என்ற அந்த பெண் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்துள்ளார். அங்கு கனெக்டிகட் என்ற பகுதியில் உள்ள கடைக்குச் சென்று இந்த பிஸ்கட் பாக்கெட்டை அவர் வாங்கியுள்ளார்.
அலர்ஜி: அந்த பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை இருக்கிறது என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.. வெறுமன வெண்ணிலா பிஸ்கட் என்று மட்டும் இருந்த நிலையில், அதை நம்பி அந்த பெண் பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக வேர்க்கடலை சாப்பிட்டால் ஏற்படும் அலர்ஜியை சமாளிக்கும் எபிபென் ஊசியை அந்த பெண் எப்போதும் உடன் வைத்தே இருந்துள்ளார்.
இருப்பினும், இந்த பிஸ்கட்டால் ஏற்பட்ட அலர்ஜி தீவிரமாக இருந்ததால் அந்த எபிபென் ஊசியைப் பயன்படுத்தியும் கூட அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், "ஓர்லா தான் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாகவும் விழிப்புடனும் இருந்தார். மேலும் அனைத்து பேக்கேஜிங்கிலும் உள்ள பொருட்களை செக் செய்த பிறகு சாப்பிடுவார்.
மேலும் எதிர்பாராத நேரங்களில் உதவ எபிபென் ஒன்றை தன்னுடன் எடுத்துச் செல்வார். பிஸ்கட் சாப்பிட்டதும் அவருக்கு அலர்ஜி ஏற்படத் தொடங்கிய பிறகு, அவர் மீது எபிபென் ஊசி செலுத்திப்பட்டது. இருப்பினும் அலர்ஜி தீவிரமாக இருந்ததால் அது பலனளிக்கவில்லை" என்று அவர் கூறினார்.
பிஸ்கட் நிறுவனம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பிஸ்கட்டை தயாரித்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது வெண்ணிலா குக்கீகளை திரும்பப் பெற்றுள்ளது. தனது பிஸ்கட்களில் முட்டை மற்றும் வேர்க்கடலை இருப்பதை அந்த நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. வேர்க்கடலை அலர்ஜி இருப்பவர்கள் தங்கள் பிஸ்கட்டை சாப்பிட்டால் மோசமான அலர்ஜி ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஓர்லா பாக்செண்டேல் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். பாலே நடனக் கலைஞரான அவர் தனது கேரியரை முன்னேற்றவே பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார். நியூயார்க் நகரில் வசித்து வந்த ஓர்லா பாக்செண்டேலவுக்கு தான் இப்படியொரு மோசமான முடிவு ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் வசிக்கும் நிலையில், தங்கள் மகளின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதற்குச் சம்மந்தப்பட்ட அந்த நிறுவனம் பதில் சொல்லியே தீர வேண்டும் எனச் சாடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications