தேர்தல் இயந்திரங்களை கைப்பற்ற ராணுவத்திற்கு உத்தரவு.. தோற்ற பின் டிரம்ப் போட்ட ஸ்கெட்ச்! பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனிடம் தோல்வி அடைந்த பின்னர், அப்போது அதிபராக இருந்த டிரம்ப் சில அதிர்ச்சி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு நவ. 3ஆம் தேதி நடைபெற்றது இதில் குடியரசு கட்சி சார்பில் அப்போது அதிபராக இருந்த டிரம்பும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் களமிறங்கினர்.
இரு தரப்பினருக்கும் இடையே இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் இத்தேர்தலில் வென்ற ஜோ பைடன் அமெரிக்காவில் 46ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்மதமும் சம்மதம்.. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமேயில்லை - அமைச்சர் சேகர்பாபு உறுதி
டிரம்ப் தோல்வி
அமெரிக்க அதிபராக உள்ள ஒருவர் தேர்தலில் தோற்பது சுமார் 29 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும் இருப்பினும், அதிபர் தேர்தலில் தான் பெற்ற தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மாபெரும் மோசடி நடந்துள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்தி வந்தார். தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்க உச்ச நீதிமன்றம் வரை சென்ற போதிலும் அவரது முயற்சி நிறைவேறவில்லை.
நாடாளுமன்ற தாக்குதல்
இறுதியாக அவரது தூண்டுதலின் பெயரில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது போராட்டக்காரர்கள் உள்ளே புகுந்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார், போராட்டக்காரர்கள் எனப் பலரும் உயிரிழந்தனர். 200 ஆண்டு பழமையான அமெரிக்க ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, டென்ஷனான டிரம்ப் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்ற ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியானது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
அதாவது 2020 தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களில் டொனால்ட் டிரம்ப் நாட்டின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றுமாறு கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகத் தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து வெளியாகியுள்ள ஆவணத்தில், ஜோ பைடனின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக அதிகாரத்தில் இருக்க டிரம்ப் எடுக்கத் தயாராக இருந்த மோசமான நடவடிக்கைகளை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
கைப்பற்ற உத்தரவு
கடந்த 2020 டிசம்பர் 16ஆம் தேதி இந்த உத்தரவு தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் வாக்குப்பதிவில் மோசடி உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பறிமுதல் செய்யுமாறும் இது தொடர்பாக ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த உத்தரவில் அதிபராக இருந்த டிரம்ப் கையெழுத்திடவில்லை. ஏன் அவர் அதில் கையெழுத்திடவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் குறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற குழு நடத்தும் விசாரணையில் இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என்ன உத்தரவு
அதிபர் டிரம்ப் கையெழுத்திட இருந்த வரைவு உத்தரவில், "அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி, சேகரித்துப் பாதுகாப்புச் செயலர் பகுப்பாய்வு செய்வார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று கூறப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என்பதையே இது காட்டுவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர். அந்த சமயத்தில் வெனிசுலா, கியூபா மற்றும் சீனா போன்ற கம்பூயிச நாடுகள் தேர்தலை குறிவைத்துள்ளதாக வலதுசாரி வழக்கறிஞர் சிட்னி பவல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிர முயற்சி
ட்ரம்ப் தோல்வியடைந்த சில வாரங்களில் முக்கிய ஸ்விங் மகாண தேர்தல் முடிவுகள் செல்லாது என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி கியுலியானியுடன் இந்த சிட்னி பவல் தான் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த சில வாரங்கள் தேர்தல் முடிவுகளைச் செல்லாது என அறிவிக்க டிரம்ப் மட்டுமின்றி அவரது நெருங்கி கூட்டாளிகள் அனைவரும் மிகக் கடுமையாக முயன்றனர். இருப்பினும், இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே திட்டம்
இதே காலகட்டத்தில் தான் டிரம்ப் இந்த வரை உத்தரவில் கையெழுத்திட இருந்தார். இந்த வரை உத்தரவு கடந்த 2019இல் வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமைத் தலைவர் மார்க் மெடோஸ் தொடர்ந்து டிரம்பை அதிபராக நீட்டிக்கச் செய்யத் தொகுத்திருந்த திட்ட விளக்கம் பவர்பாயிண்ட்டை ஒத்து இருந்தது. அதாவது அமெரிக்க மார்ஷல்கள் மூலம் 50-மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றுவதே அந்த திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.