துருக்கியில் 3 மாதங்களுக்கு அவசர நிலை.. உத்தரவை வெளியிட்டு காரணத்தையும் சொன்ன அதிபர் எர்டோகன்
துருக்கியில் 10 மாகாணங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்: நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். அவசர நிலை பிறப்பித்தது எதற்காக என்ற காரணத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானபதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

கட்டிடங்கள் தரைமட்டமாகின
துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். இங்கு பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற 10 மாகாணங்களிலும் பல கட்டிடங்கள் தரைமட்டமாக காட்சி அளிக்கின்றன. தங்கள் நேசத்திற்குரியவர்களை பறிகொடுத்த துக்கத்தில் பலரும் இருப்பதை எங்கு பார்த்தாலும் காண முடிகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உலக நாடுகள் பலவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

மீட்பு பணிகளில் தொய்வு
துருக்கிக்கு 65 நாடுகளில் இருந்து 2,660 பேர் மீட்பு, நிவாரண பணிகளுக்காக விரைவதாக துருக்கியின் பேரழிவு மற்றும் அவசரகால அமைப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் மட்டுமே சுமார் 25 ஆயிரம் எமெர்ஜன்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் பல இடங்களில் மீட்பு, நிவாரண பணி குழுவினர் வரவில்லை என்ற தகவலும் வருகிறது. அடிக்கடி ஏற்படும் பின் அதிர்வுகளாலும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவசர நிலையை அறிவித்த எர்டோகன்
துருக்கியில் நில நடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் மக்கள் விளையாட்டு மையங்களிலும், கண்காட்சி அரங்குகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல இடங்களில் இரவெல்லாம் மக்கள் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். காசியான்டெப் நகரத்தில் மக்கள் வணிக வளாகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், சமுதாய மையங்களிலும் அடைக்கலம் புகுந்தனர். இந்த நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்த 10 மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் எர்டோகன் அவசர நிலை பிரகடனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த 3 மாதங்களுக்கு அமல்
துருக்கி நாட்டு சட்டப்பிரிவு 119-ன் கீழ் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ள எர்டோகன் அதிபர் அலுவலகத்தின் முடிவுளை விரைந்து எடுக்கவும் அதை செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும் இந்த அவசர நிலையை பிறப்பித்து இருப்பதாக தெரிவித்தார். தேடுதல் மீட்பு பணிகளில் உதவ 70 நாடுகள் முன்வந்து இருப்பதாகவும் எர்டோகன் கூறினார்.












Click it and Unblock the Notifications