வல்லரசு நாட்டுக்கே இந்த கதியா.. அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா.. எப்படி சமாளிக்கிறார்கள் தெரியுமா?
வாஷிங்டன்: உலகின் பெரிய அண்ணன், வல்லரசு நாடு அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. அங்கு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. அமெரிக்கா இந்த பாதிப்பிலிருந்து எப்படி தப்பிக்க முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என்பதை பார்க்கலாம்.
Recommended Video
அமெரிக்காவில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை, 1,500ஐ கடந்துள்ளது. 41 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மிக மோசமான வைரஸ், மருத்துவ வசதிகளை முடக்கிப் போடக்கூடிய வேகத்தில் பரவக்கூடியது என்ற அச்சம், ஊழியர்களுக்கு உள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
எனவே பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, அமெரிக்கா எடுத்து வருகிறது. அதிகமான ஊழியர்கள் அது பெரிதோ, சிறியதோ, வீட்டிலிருந்து வேலை பார்க்க தொடங்கியுள்ளனர். ஆனானப்பட்ட வெள்ளை மாளிகையே கூட ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை தனது ஊழியர்களுக்காக பரிசீலித்து வருகிறது. பள்ளிகள் மூடப்படுகின்றன, அல்லது வெர்ச்சுவல் வகுப்பறைகளாக மாறுகின்றன.
தடைகள்
ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அமெரிக்கா வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஓஹியோ, மேரிலாந்து, மிச்சிகன் மற்றும் பெரிய நகர்ப்புற பள்ளி மாவட்டங்களான சியாட்டில் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகியவை கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து கே -12 பள்ளிகளையும் மூடியுள்ளன.
ஓஹியோ நிலவரம்
ஓஹியோவில் உள்ள அனைத்து கே -12 பொது, பட்டய மற்றும் தனியார் பள்ளிகளும் திங்கள்கிழமை தொடங்கி மூன்று வாரங்களுக்கு மூடப்படும் என்று ஓஹியோ நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓஹியோ அறிவிப்புக்குப் பிறகு, மேரிலாந்தின் கண்காணிப்பாளரும் அப்படியான அறிவிப்பை வெளியிட்டார். திங்கள்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று அவர் அறிவித்தார். வியாழக்கிழமை மாலை, மிச்சிகன் அரசு ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவித்தது.
4.9 மில்லியன் குழந்தைகள்
வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வகுப்புகளை ரத்து செய்த முதல் பெரிய பெருநகர பள்ளி மாவட்டமாக சியாட்டில் பொதுப் பள்ளிகள் திகழ்கின்றன.
சுமார் 54,000 மாணவர்கள் இந்த மாவட்டத்தில், பாதிக்கப்படுகிறார்கள். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என்று சியாட்டில் அறிவித்தது. வியாழக்கிழமை மாலை, கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டம் சார்பில் வெளியான அறிவிப்பில், மார்ச் 16 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை, அதாவது வசந்தகால இடைவேளை முடிவடையும் வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தது.
இதுவரை, நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அல்லது மூட திட்டமிட்டுள்ளன, இது சுமார் 4.9 மில்லியன் குழந்தைகளின் கல்வியை பாதிக்கிறது என்று கல்வி வார இதழின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள்
பள்ளி மட்டுமின்றி, பெரு நிறுவனங்களும் விடுமுறையை அறிவித்துள்ளன. கூகுள் நிறுவனம் செவ்வாயன்று வட அமெரிக்கா ஊழியர்களை வீட்டிலிருந்து ஏப்ரல் 10 வரை வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஊழியர்களும் மார்ச் 12 முதல் தொலைதூரத்தில் இருந்தே பணிபுரியுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அதிபர் உறுதி
பேஸ்புக் (FB), கூகுள், ட்விட்டர் மற்றும் அமேசான் (AMAZON) ஆகியவை உலகெங்கிலும் உள்ள பல ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலமாக நாங்கள் எங்கள் குடிமக்களுக்கான அச்சுறுத்தலைக் கணிசமாகக் குறைப்போம், இறுதியில் இந்த வைரஸை நாங்கள் விரைவாகவும் தோற்கடிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.