மியான்மர் நாட்டின் மீது பொருளாதார தடை... அமெரிக்க அதிபர் பைடன் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்: மியான்மர் நாட்டில் ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அதோடு, மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மியான்மரில் கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேர்தல் முறையாக நடைபெற்றவுடன் ஆட்சி திருப்பியளிக்கப்படும் என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது.
மக்கள் போராட்டம்
மியான்மரில் நடைபெற்ற இந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடு முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த மியான்மர் ராணுவம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தடை
மியான்மரில் நடைபெற்று வரும் ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், மியான்மர் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவுள்ளதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பிற்கு வித்திட்ட தலைவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மியான்மர் அரசுக்கு அமெரிக்கா 1 பில்லியன் டாலர் நிதி அளித்திருந்தது. இதை அந்நாட்டு ராணுவ தலைவர்கள் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சொத்துகள் முடக்கம்
இந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு யார் காரணமான முக்கிய நபர்கள் இந்த வாரம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், மியான்மர் நாட்டின மீது வலுவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் விதிக்கவுள்ளதாகவும் அந்நாட்டிற்குப் பயனளிக்கும் அமெரிக்கச் சொத்துக்களை முடக்குவதாகவும் அவர் அறிவித்தார். அதேநேரம் மியான்மர் மக்கள் நேரடியாகப் பலன் பெரும் சுகாதார மற்றும் சமூக குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைவர்களை விடுவிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக மியான்மர் மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்கின்றர். மியான்மரில் நடைபெறும் வரும் நிகழ்வுகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் முறைகேடாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.