ஆபாச நடிகைக்கு பணம்.. டிரம்பை குற்றவாளி என அறிவித்த அடுத்த நொடி குவிந்த நன்கொடை! இணையதளமே முடங்கியது
வாஷிங்டன்: ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அங்கு நேர்மாறான ஒரு நிகழ்வே நடந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரம் இப்போது பூதாகரமாகி உள்ளது. அதாவது இருவரும் நெருக்கமாக இருந்தது குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்று டிரம்ப் 2016 அதிபர் தேர்தல் சமயத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

டிரம்ப்: இருப்பினும், அதற்கு அவர் தேர்தல் நிதியைப் பயன்படுத்தினார் என்பதே குற்றச்சாட்டாகும். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டிரம்பை குற்றவாளி என அறிவித்து அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த தீர்ப்பு டிரம்பிற்கு பின்னடைவே தரும் என பைடன் தரப்பு நினைத்தது. ஆனால், அங்கு நடந்ததே வேறு..
அதாவது டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து டிரம்ப் பிரச்சாரத்திற்கு நன்கொடையைக் கொட்டியுள்ளனர். இதனால் டிரம்பின் நிதி திரட்டும் பக்கமே கொஞ்ச நேரம் முடங்கிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிதி திரட்டும் பக்கம்: டிரம்பின் தனிப்பட்ட நிதி திரட்டும் பக்கம் முடங்கிய நிலையில், அந்த தளத்திற்கு வருவோர் குடியரசு கட்சியின் நன்கொடை பக்கத்தில் நன்கொடை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் வரை நிதி திரட்டும் பக்கம் முடங்கி இருந்த நிலையில், அதன் பின்னரே அது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.
தொழில்நுட்பக் கோளாறால் இந்த தளம் முடங்கியதாகவும் இருப்பினும் ஒரு மணி நேரத்திற்குள் தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும் டிரம்ப் பிரச்சார குழு விளக்கமளித்துள்ளது.
தேசபக்தி: தேசபக்தி கொண்ட அமெரிக்கர்கள் பல லட்சம் பேர் டிரம்பிற்கு நன்கொடை தரத் திரண்டதே இணையதளம் முடங்க காரணம் என்று டிரம்பின் ஆலோசகர் கிறிஸ் லாசிவிடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜோ பைடனின் மோசடியான விசாரணை காரணமாகவே இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், மக்களுக்கு எது உண்மை எனத் தெரியும். இதன் காரணமாகவே நன்கொடை தர மக்கள் திரண்டனர். இதற்கெல்லாம் மக்கள் தேர்தல் நாளில் நிச்சயம் பதிலளிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
என்ன பிரச்சினை: அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021 வரை 45ஆவது அதிபராக இருந்தவர் டிரம்ப்.. அவருக்கு 2005ஆம் ஆண்டிலேயே மெலனியா என்ற பெண்ணுடன் 3ஆவது திருமணம் நடந்த போதிலும், அதன் பிறகும் அவர் பல பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். அப்படி தான் ஆபாச நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இது குறித்துத் தான் பொதுவெளியில் பேசக்கூடாது என்று 2016இல் அதிபர் தேர்தலுக்கு முன்பு டிரம்ப் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
இது அந்நாட்டு சட்டப்படி சட்ட விரோதமானது இல்லை. ஆனால், இதற்கு அவர் தேர்தல் நிதியைப் பயன்படுத்தினார் என்பதே இப்போது எழுந்துள்ள புகாராகும். இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது மொத்தம் 34 குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அனைத்திலும் டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் ஜூரி தீர்ப்பளித்தது. இருப்பினும், இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications