போட்றா வெடிய.. அதென்ன சார்ஜர் கொடுக்காம செல்போன் சேல்ஸ்? ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.164 கோடி அபராதம்
வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனம் ஐ போன் 13 மற்றும் ஐ போன் 12 மாடல்களுக்கு சார்ஜர்கள் இன்றி செல்போன்கள் மட்டும் விற்பனை செய்ததை எதிர்த்து பிரேசில் நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சுமார் ரூபாய் 164 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல செல்போன் நிறுவனம் ஐ போன். மிகவும் விலை உயர்ந்த இந்த ஐ போன்கள் அதி நவீன மேம்பட்ட பாதுகாப்பு வசதியை கொண்டது.
வசதி படைத்தவர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் கைகளில் ஐ போன்கள் தவழுவதையே காண முடியும்.

ஆப்பிள் ஐபோன்
இந்த போன்களின் ஆரம்ப விலையே ரூ. 30 ஆயிரம் இருக்கும். ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த ஐபோன்களின் விற்பனையால் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருவாயை ஆப்பிள் நிறுவனம் ஈட்டி வருகிறது. உலக அளவில் செல்போன் சந்தைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் இந்த ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ஆம் அண்டு அக்டோபர் மாதத்தில் புதிய நடைமுறையை கொண்டு வந்தது

சார்ஜருடன் விற்பனையாகாது என அறிவிப்பு
அதாவது, ஐபோன் 12, ஐபோன் 13 மாடல் செல்போன்கள் இனி சார்ஜருடன் விற்பனையாகாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. சார்ஜர்கள் தேவைப்பட்டால் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. மின்னணு கழிவுகள் அதிகரித்து வருவதை குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐ போன் நிறுவனம் கூறியது. இருந்தாலும், செலவினங்களை குறைக்கும் முயற்சியாக ஆப்பிள் இத்தகைய நடைமுறையை கையாள்வதாக ஒருபக்கம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரேசில் நாட்டில் வழக்கு
சார்ஜர்கள் இல்லாமல் விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் சார்ஜர்களை தனியாக வாங்க வாங்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் சார்ஜர்கள் இன்றி செல்போன்கள் விற்பனையில் ஈடுபடுவதற்கு எதிராக பிரேசில் நாட்டில் வழக்கு தொடரப்பட்டது. அங்குள்ள சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ரூ.164 கோடி அபராதம்
வழக்கை விசாரித்த பிரேசில் நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.164 கோடி) அபராதம் விதித்து உத்தரவிட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த செயல் தவறானது என்றும் வாடிக்கையாளர்களை கூடுதலாக ஒரு பொருள் வாங்க நிர்பந்திப்பதாகவும் விமர்சித்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் செல்போன்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர்களை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விற்பனையை நிறுத்துமாறு அறிவிப்பு
சார்ஜர் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்ட ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக 20 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது அந்த நிறுவனத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து உடனடியாக ஐபோன் 12, 13 மாடல் போன்களின் விற்பனையை நிறுத்துமாறும் விற்பனை நிலையங்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே 2.5 மில்லியன் டாலர்
பிரேசில் சிவில் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே பிரச்சினைக்காக 2.5 மில்லியன் டாலர் அபராதமாக பிரேசிலின் நீதித்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதம் விதித்து இருந்தது.












Click it and Unblock the Notifications