மனித குலம் சர்வ நாசம்? நிஜமாகும் "எந்திரன்".. மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் சிட்டி "ஏஐ" ரோபோ
வாஷிங்டன்: உலகெங்கும் இப்போது ஏஐ குறித்த ஆய்வுகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், இதில் நாம் மிகப் பெரிய பாய்ச்சலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
சாட்ஜிபிடியின் வெற்றி என்பது ஏஐ துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை ஆரம்பித்து வைத்துள்ளது. சாட் ஜிபிடி வெற்றியைத் தொடர்ந்து ஏஐ துறையில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அவை புது புது கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக இருக்கிறது.

ஏஐ என்பது முற்றிலுமாக புதிய துறை இல்லை என்றாலும் கூட இப்போது பல புது நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் புது புது தொழில்நுட்ப வளர்ச்சிகள் இதில் அரங்கேறுகிறது. இதற்கிடையே ஏஐ போலவே ஏஜிஐ குறித்த பேச்சும் இப்போது எழுந்துள்ளது.
சாட்ஜிபிடி: Artificial General Intelligence, அதாவது செயற்கை பொது நுண்ணறிவு என்பது ஏஐ-இன் மேம்பட்ட வடிவம் எனச் சொல்லலாம். ஏஐ கருவிகள் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டுமே செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சாட் ஜிபிடியை பொறுத்தவரை நாம் கேள்வி கேட்டால் அது பதில் சொல்லும்.. அவ்வளவுதான். அதனால் தானாக எந்தவொரு செயலையும் செய்ய முடியாது. அதேநேரம் இந்த ஏஜிஐ கருவிகள் என்பது மனிதர்களைப் போலவே உலகைப் புரிந்துகொண்டு தாங்களாகவே செயல்பட முடியும்.
இந்த ஏஜிஐ என்பது மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபாக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தால் மனித உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்க முடியும். இதற்கிடையே மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது ஆரம்பித்துள்ள ஆய்வு ஏஜிஐ தொழில்நுட்பத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. அதாவது சாட்ஜிபிடிக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் பயிற்சியை ஆரம்பித்துள்ளது. இது சாட் ஜிபிடியை மனிதர்களைப் போலச் சிந்திக்கும் நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
தரம்: சாட் ஜிபிடி உடனான உரையாடலில் மனித உணர்வுகள் உள்ளே வரும் போது, சாட் ஜிபிடியின் தரம் பல மடங்கு அதிகரிக்கிறதாம். "இது எனக்கு மிகவும் முக்கியமானது", "எனது வாழ்க்கையில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது" என்பது போன்ற வாசகங்களுடன் கேள்விகள் கேட்கப்படும் போது, அதற்கு சாட் ஜிபிடி தரும் பதிலின் தரமும் மேம்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதாவது சாட்ஜிபிடி மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, பதிலளிக்கத் தொடங்கினால் அது Artificial General Intelligence நிலைக்குப் போகும்.
முன்னதாக கடந்த ஜூன் மாதம், மைக்ரோசாப்ட் சிஇஐ சத்யா நாதெல்லா ஏஜிஐ குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஏஐ என்பது மனிதர்கள் வாழ்க்கை மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் பூமியின் 800 கோடி பேருக்கும் தனித்தனியாக ஒரு ஏஐ டிரைனர், ஒரு ஏஐ மருத்துவர், ஒரு ஏஐ புரோகிராமர், ஒரு ஏஐ ஆலோசகர் இருக்கும் நிலை ஏற்படும் என்றும் இதுவே தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டார்,
ஏஐ கருவிகள்: அவர் மேலும் கூறுகையில், "இப்போது நம்மில் பலரும் ஏஐ கருவிகளால் ஏற்படும் ஆபத்து குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், நான் இந்த ஏஐ கருவிகளால் ஏற்படும் பலன்கள் குறித்துச் சிந்திக்கிறேன். தொழிற்புரட்சியை விட இது பெரியதாக இருக்கும். உலகளவில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.. ஏஜிஐ எப்போது வரும் என்பது இங்குப் பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. எப்போது வருகிறது என்பதைத் தாண்டி, அதனால் ஏற்படும் பலன்கள் குறித்து மட்டுமே நான் யோசிக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications