அமெரிக்க கழுகு vs சீன டிராகன்! வர்த்தக போரில் யார் கை ஓங்கி இருக்கு! டிரம்பை காலி செய்யும் ஜின்பிங்?
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை அறிவித்து வருகிறது. இப்படி இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சத்தில் இருக்கும் சூழலில் அமெரிக்கா சீனா இடையே நடக்கும் வர்த்தகப் போரில் யாருடைய கை ஓங்கி இருக்கிறது. டிரம்ப், ஜி ஜின்பிங் இடையே யாருக்கு அதிக பவர் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலக நாடுகள் மீது அறிவித்திருந்த ரெசிப்ரோக்கல் வரியைத் திரும்பப் பெற்ற டிரம்ப் சீனா மீதான வரிகளை மட்டும் வாபஸ் பெறவில்லை. மற்ற நாடுகள் மீதான வரிகளை 90 நாட்கள் நிறுத்திய டிரம்ப், சீனா மீதான வரிகளை மட்டும் 145% வரை உயர்த்தினார். உலக சந்தையை சீனா மதிக்கவில்லை எனக் கூறி இந்த வரிகளை அறிவித்தார்.

டிரம்ப்- சீனா வரிகள்
டிரம்ப் முதலில் வரிகளை அறிவித்தபோது உலகின் பல்வேறு நாடுகளும் பதிலடியாக வரிகளை அறிவிக்காமல் பேச்சுவார்த்தைக்கு இறங்கிச் சென்றது. ஆனால், சீனா பேச்சுவார்த்தை என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. நேரடியாகப் பதிலடி வரிகளை அறிவித்தது. டிரம்ப் வரிகளை நல்ல ஜோக் எனச் சாடிய சீனா, அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 125%ஆக உயர்த்தி அதிர்ச்சி கொடுத்தது..
வர்த்தகப் போர்
உலகின் இருபெரும் நாடுகள் இதுபோல வரி மீது வரி விதித்து வணிகப் போரை நடத்தி வருகிறது. டிரம்ப் இருக்கும் வரை அமெரிக்கா வரிகளைக் குறைக்க வாய்ப்பில்லை. மறுபுறம் சீனா பின்வாங்கும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. 2016-2020 காலகட்டத்தில் அதிபராக இருந்தபோதே டிரம்ப் இதுபோல சீனா வரிகளை அறிவித்திருந்தார். அப்போது பேச்சுவார்த்தைக்கு முயன்ற சீனா, இந்த முறை பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம். அமெரிக்கா சீனா இடையே நடக்கும் வர்த்தகப் போரில் யாருடைய கை ஓங்கி இருக்கிறது. டிரம்ப், ஜி ஜின்பிங் இடையே யாருக்கு அதிக பவர் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
யாருடைய கை ஓங்கி இருக்கிறது!
டிரம்ப் நடவடிக்கையால் சீனாவுக்குப் பொருளாதார அழுத்தங்கள் இருக்கும் என்ற போதிலும் சீனாவின் கைதான் இந்த விஷயத்தில் ஓங்கி இருக்கிறது. டிரம்ப் வரி அறிவிப்பு சர்வதேச சந்தைகளைச் சீர்குலைத்திருந்தாலும், சீனாவின் நடவடிக்கைகள் நிலைமை எளிமையாகச் சமாளிக்க உதவும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் சீன மக்கள்தொகை தான் அவர்களைக் காப்பாற்றுகிறது. சுமார் 140 கோடி மக்களைக் கொண்ட சீனாவுக்கு உள்நாட்டில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. சீனாவின் பொருளாதாரத்தை இந்த வலுவான உள்நாட்டுச் சந்தை தான் தாங்கி பிடிக்கிறது. இதனால் அமெரிக்க ஏற்றுமதிகளை முழுமையாக நம்பி இருக்கும் சூழல் சீனாவுக்கு இல்லை.

டிரம்பிற்கு இருக்கும் மெகா சிக்கல்
மேலும், வரியால் அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்தால் மக்கள் கோபம் டிரம்ப் மீது திரும்பும். அடுத்த 2 ஆண்டுகளில் அங்கு செனட் மிட் டேர்ம் தேர்தல் நடக்கும் நிலையில், நாடாளுமன்றம் டிரம்ப் கையைவிட்டுப் போகலாம். அதன் பிறகு நினைத்த நேரத்தில் ட்ரம்பால் நினைத்த சட்டத்தை உருவாக்க முடியாது. அதேநேரம் சீனாவில் அப்படி இல்லை. சீனாவில் கம்யூனிஸ அரசு நடந்து வருகிறது. விலைவாசி அதிகரித்தால் டக்கென மானியத்தைக் கொடுத்துச் சமாளித்துவிடுவார்கள். டிரம்பால் இதுபோல எடுத்தோம் கவிழ்த்தோம் என மானியங்களை அறிவிக்க முடியாது.
சீனாவின் வர்த்தகப் பன்முகத்தன்மை அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் உடனான உறவுகளைத் தனது பெல்ட் அண்ட் ரோடு போன்ற முயற்சிகள் மூலம் சீனா வலுவாக்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வியட்நாம், மலேசியா மற்றும் கம்போடியா சுற்றுப்பயணம், அங்கு அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் சீனாவுக்கு கை கொடுக்கும்.
சீனாவின் பிளான் பி
வரியால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கும் பொருட்களை இந்த நாடுகளுக்குச் சீனா திருப்பிவிடும். மேலும், வியட்நாம் உடன் நல்லுறவு இருக்கும் சூழலில், அங்குச் சீன தனது பொருட்களை அனுப்பலாம். வியட்நாமிற்கு வரிகள் குறைவாக இருக்கும் சூழலில் அமெரிக்காவின் வரிகளை இதுபோலவும் சீனா தவிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது.
டிரம்பின் இந்த வரிகளால் பாதிக்கப்படும் நாடுகளும் சீனா பக்கம் செல்லலாம். குறிப்பாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமெரிக்காவுடன் கடந்த காலங்களில் நல்லுறவைக் கொண்டிருந்தது. அந்த நாடுகள் மீதும் டிரம்ப் இஷ்டத்திற்கு வரிகளை அள்ளி வீசி இருக்கும் சூழலில், இந்த நாடுகளும் மெல்லச் சீனா பக்கம் செல்லும் ஆபத்து இருக்கிறது. பைடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளாக இருந்த மலேசியா மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் கூட சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது இதையே குறிக்கிறது. இது அமெரிக்காவின் சர்வதேச செல்வாக்கைப் பலவீனப்படுத்துகிறது. மேலும், சீனாவின் பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்துகிறது.

சிக்கலை தான் தரும்
டிரம்பின் வரிகள் குறுகிய காலத்தில் அமெரிக்காவுக்கு நன்மைகளைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இதுபோல இஷ்டத்திற்குப் போடப்படும் வரிகள் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தலாம். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் டிரம்ப் வரி குறித்து வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு அது நெகடிவாக போய் முடியும்.
நன்மை கொடுக்காது
முதலில் டிரம்ப் வரிகளை அறிவித்தது ஏன்! சீனாவில் இருந்து அதிகப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அதைத் தடுத்து உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றே டிரம்ப் வரிகளை அறிவித்தார். ஆனால், இதுவே கூட நடக்காமல் போய்விடும். ஏனென்றால் டிரம்ப் எப்போது என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. இதனால் அவரை நம்பி பல கோடி முதலீடு செய்து, அமெரிக்காவில் புதிய ஆலைகளைப் பல நிறுவனங்கள் யோசிக்கிறது. அப்படியே ஆலையைத் திறந்தாலும் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகமாக இருக்கும் சூழலில், அது பொருட்களின் விலை உயரவே வழிவகுக்கும்.
அதாவது டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்க அரசின் வருவாய் உயர்வது, உலக நாடுகளிடம் இருந்து நல்ல டீலை பெறுவது உள்ளிட்ட சில நன்மைகள் அமெரிக்காவுக்குக் கிடைத்தாலும் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்குப் பின்னடைவையே தரும். மறுபுறம் சீனாவின் கை ஓங்கி இருப்பது அவர்களுக்கும் தெரியும், இதன் காரணமாகவே கடந்த முறையைப் போலப் பேச்சுவார்த்தைக்கு வராமல் மவுனம் சாதிக்கிறது.!












Click it and Unblock the Notifications