"அரசியல்" தான் மெனு.. உள்ளே வரும் ஜி ஜின்பிங்.. அமெரிக்காவில் சீக்ரெட்டாக நடக்கும் பிஸ்னஸ் டின்னர்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல ஒரு உறவு இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் இப்போது அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ நகருக்குச் செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க பிஸ்னஸ்மேன்களுடன் டின்னர் நிகழ்விலும் கலந்து கொள்கிறார். இதில் அமெரிக்காவில் உள்ள டாப் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் இடையே முதலில் சந்திப்பு நடைபெற உள்ளது. அதில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் தொடங்கிப் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதைத் தொடர்ந்து இந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மையம் சார்பில் தொழிலதிபர்களுடன் இந்த டின்னர் நிகழ்வு நடைபெறும். இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இரவு டின்னர்: மேலும், அமெரிக்கத் தொழிலதிபர்களுக்கும் இந்த இரவு டின்னர் முக்கியமானது.. சீனாவில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் நேரடியாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் நிலையில், தங்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜி ஜின்பிங்கிடம் முறையிட அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சீனாவின் பொருளாதார மந்தநிலை, விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்று சீனாவில் பிஸ்னஸ் செய்வது சிக்கலாக மாறி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு குறித்து விவரம் அறிந்த சிலர் கூறுகையில், "இரு தரப்பிற்கும் இடையே நல்லவொரு தகவல் தொடர்பு வேண்டும் என்பதே இந்த டின்னர் நிகழ்வின் நோக்கமாகும். இந்த நிகழ்வில் அமெரிக்க மற்றும் சீனா என இரு தரப்பில் இருந்தும் அதிகாரிகள் பேசுவார்கள். ஆனால், யார் பேசுவார்கள் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது" என்றார். இந்த டின்னர் நிகழ்வுக்கான பணிகள் நடந்து வரும் போதிலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மறுப்பு: அமெரிக்கா- சீனா வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க-சீனா உறவுகளுக்கான தேசிய குழு ஆகியவை இந்த டின்னர் நிகழ்வு குறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர். மேலும், சீன தூதரகமும் இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. சீனா அரசு உய்குர் முஸ்லீம்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்வதாக அமெரிக்கா வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகிறது. இந்த சூழலில் டின்னர் நிகழ்வு நடப்பதே இந்த மவுனத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த டின்னர் நிகழ்வில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையே நிலவும் மோதல், சீனாவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், பாதுகாப்பு சார்ந்த கேள்விகளும் இருப்பதால் இப்போது அமெரிக்க நிறுவனங்கள் சீனாவுக்கு வெளியே இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் தங்கள் உற்பத்தி சங்கிலியை உருவாக்கும் நடவடிக்கையில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
ஏன் முக்கியம்: இந்த நிகழ்வில் சீனாவில் தொழில் நடத்துவது லாபகரமானதாகவே இருக்கும் என்பது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தனது கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிவிட்ட போதிலும், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்கா அரசு சீனா நிறுவனங்களுடன் வைத்திருக்கும் உறவு குறித்து எச்சரித்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்த டின்னர் நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் எந்தெந்த அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மறுபுறம் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இதில் பங்கேற்பது தவறான முன்னுதாரணம் என்று அமெரிக்காவிலே இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications