12,500 அடியில் டைட்டானிக்.. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு கட்டணம் எவ்வளவு?
வாஷிங்டன்: டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக தி ஓசன் கேட் நிறுவனத்தின் டைட்டன் நீர் மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பேர் உயிரிழந்த நிலையில் அதில் பயணம் செய்ய ஒருவருக்கு எவ்வளவு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியுமா?
டைட்டானிக் கப்பல் கனடா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் 1912 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1200 பேர் பலியாகிவிட்டனர். இந்த கப்பலின் பாகங்கள் ஆங்காங்கே உடைந்து சிதறி உள்ளது.

இந்த கப்பலின் பாகங்கள் தற்போது அந்த கடல்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் உள்ளது. இந்த கப்பலை ஆய்வு செய்யும் பணியில் தி ஓசன் கேட் எனும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக டைட்டன் எனும் நீர் மூழ்கி கப்பலை தயாரித்தது. இதில் பைலட் உள்பட 5 பேர் வரை பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டது.
ஆழ்கடல் ஆய்வுக்கான நிதியை திரட்ட டைட்டன் நீர்மூழ்கியில் சாகச சுற்றுலா மேற்கொள்ளும் திட்டத்தையும் இந்த நிறுவனம் முன்னெடுத்தது. இதன் மூலம் டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்று டைட்டானிக்கை பார்வையிட 2.5 லட்சம் டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 2.04 கோடியாகும். இதுவரை 2 ஆண்டுகளில் தலா ரூ 2 கோடி செலுத்தி 46 பயணிகள் வரை இந்த நீர்மூழ்கி கப்பலை பார்வையிட்டனர்.
இது போல்தான் இந்த நீர் மூழ்கி கப்பல் பயணம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. அப்போது அதில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹாமிஸ் ஹார்டிங், இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜாடா மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டைவர் பால் ஹென்றி, ஓசன்கேட் சாகச சுற்றுலா நிறுவனத்தின் சிஇஓ.,வும், நீர்மூழ்கியின் பைலட்டுமான ஸ்டாக்டன் ரஷ் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணிகள் தொடங்கின. இந்த கப்பலில் பாதுகாப்பு அம்சம் என பார்த்தால் 96 மணிநேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் அதாவது 4 நாட்களுக்கு தேவையான பிராணவாயு இருக்கும். எனினும் 5 நாட்களாகியும் இந்த கப்பல் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் அந்த கப்பலை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கி கிடக்கும் இடத்திலிருந்து 1,600 அடி ஆழத்தில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் சிதறி கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்தது. ஆழ்கடலில் இருந்த அதிக அழுத்தம் காரணமாக இந்த கப்பல் உடைந்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் பயணம் செய்த அனைவருமே இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உடைந்த பாகங்கள் அனைத்தையும் சேகரித்த பிறகுதான் கப்பலில் கடைசி நிமிடம் நடந்தது என்ன என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications