H-1B விசாவை முழுமையாக தடை செய்ய புதிய மசோதா! இந்தியர்களுக்கு பேரிடி கொடுத்த டிரம்ப் கட்சி.. பகீர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே அவர் அங்குள்ள வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசாவுக்கும் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார். இதற்கிடையே ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாக நிறுத்தும் மசோதாவைக் கொண்டுவர உள்ளதாக டிரம்ப் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிரம்ப் வந்தது முதலே அவர் வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே டிரம்ப்பின் குடியரசுக் கட்சி எம்பி மார்ஜோரி டெய்லர் கிரீன் என்பவர் ஹெச்-1பி விசா திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக H-1B திட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான புதிய மசோதாவை தான் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். பல துறைகளில் அமெரிக்கர்களுக்குப் பதிலாக வெளிநாட்டினர் வேலைக்கு அமர்த்தப்படுவதை இது தடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியர்களுக்குப் பாதிப்பு
இந்த H-1B விசா திட்டம் மூலம் இந்தியர்களே அதிகம் பயனடைந்து வருகிறார்கள். இந்த விசா பெற்றவர்களில் கிட்டத்தட்ட 70% இந்தியர்களாக இருக்கும் சூழலில் மார்ஜோரி டெய்லரின் இந்தக் கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஹெச்-1பி விசா மீதான எந்தவொரு நடவடிக்கையும் நிச்சயம் இந்தியர்களையே பாதிக்கும். மேலும், H-1B விசா, கிரீன் கார்டு மூலம் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கான வழியாகவும் இருக்கும் நிலையில், அதுவும் கூட டெய்லரின் இந்தத் திட்டத்தால் தடைப்படலாம்.
டிரம்ப் கட்சி எம்பி மார்ஜோரி டெய்லர் கிரீன் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்கள் H-1B திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.. இதன் மூலம் அமெரிக்கத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இங்குள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்துத் தரப்பினருமே H-1B திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை
இதன் காரணமாக அமெரிக்க மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். அமெரிக்கர்கள் உலகின் மிகத் திறமையானவர்கள். அமெரிக்க மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் அமெரிக்கர்களுக்கு மட்டுமே சேவை செய்வேன், எப்போதும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன். இந்த மசோதா மூலம் H-1B திட்டம் முழுமையாக நிறுத்தப்படும்.
தொழில்நுட்பம், சுகாதாரம், பொறியியல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் அதிக பேருக்கு வேலை கிடைக்கும். நான் கொண்டு வரும் மசோதா, H-1B திட்டத்தை நீக்கி, அமெரிக்கர்களுக்கு மீண்டும் வேலை அளிக்கும்! அடுத்த தலைமுறையினர் மீது நாம் முதலீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.
மருத்துவர்கள்
அதேநேரம் டெய்லரின் இந்த பிளானிலும் ஒரு விலக்கு தரப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் மருத்துவர்கள் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், ஆண்டுக்கு 10,000 விசாக்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்களுக்கு மட்டும் வழங்கப்படுமாம். இருப்பினும், அதுவும் கூட 10 ஆண்டுகளில் படிப்படியாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெய்லர் மேலும் கூறுகையில், "நாம் அமெரிக்க மருத்துவர்களை உருவாக்க வேண்டும். ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் ஆண்டுக்கு 10,000 விசாக்கள் தரப்படும். இருப்பும், இது 10 ஆண்டுகளில் நீக்கப்படும். மேலும், இதன் மூலம் குடியுரிமையையும் பெற முடியாது. விசா வைத்திருப்பவர்கள் தங்கள் விசா காலாவதியானதும் சொந்த நாட்டிற்குக் கட்டாயம் திரும்ப வேண்டும்" என்றார்.
டிரம்ப் சொன்ன பாயிண்டு
சமீபத்தில் தான் டிரம்ப் கூட அமெரிக்காவில் சில குறிப்பிட்ட துறையில் போதுமான அளவுக்கு வல்லுநர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருந்தார். இதனால் ஹெச்-1பி விசா தேவை என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அவருக்கு எதிராகவே அவரது கட்சி எம்பி இதுபோன்ற கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
மேலும், நமது நாட்டில் பொதுவாக ஆளும் தரப்பு கொண்டு வரும் எல்லா மசோதாக்களும் நிறைவேற்றப்படும். ஆனால், அமெரிக்காவில் எம்பிக்களே தனியாக மசோதாக்களைக் கொண்டு வருவார்கள். இருப்பினும், அந்த மசோதாக்கள் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.












Click it and Unblock the Notifications