"ஜோர்டான் + எகிப்து.." காசா குறித்து டிரம்ப் தடாலடி! உற்று கவனிக்கும் அரபு நாடுகள்.. ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே காசா பகுதியில் வெடித்த மோதல் சுமார் 1.5 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. போர் முடிந்து அங்கு மெல்ல அமைதியான சூழல் திரும்பி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சில பரபர கருத்துகளைத் தெரித்துள்ளார். டிரம்பின் இந்த கருத்துகளை அங்குள்ள அரபு நாடுகள் உற்றுக் கவனித்து வருகின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. சுமார் ஓராண்டிற்கு மேலாகவே போர் தொடர்ந்து வந்தது. இதனால் காசாவில் உள்ள அப்பாவி மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

டிரம்ப்:
நீண்ட முயற்சிக்கு பிறகே கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தனம் செய்ததில் ஒருவழியாகப் போர் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இந்தச் சூழலில் காசா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது காசா பகுதியில் இப்போது தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்து அவர் தனது யோசனையை வெளிப்படுத்தியுள்ளார். காசா பகுதியில் இருந்து அதிகப்படியான பாலஸ்தீனிய அகதிகள் வெளியேறும் சூழலில் அவர்களை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் அதிகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியைச் சுத்தப்படுத்த இதுவே ஒரு வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் பேச்சுவார்த்தை:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த நிலையில், அப்போது விமானத்திலேயே வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காசா போர் குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குத் தான் அவர் இந்த பதிலை அளித்தார். ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன அகதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஜோர்டான் மக்கள் பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். எகிப்தும் கூட ஏற்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும். காசா பகுதி போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதை நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது
அரபு நாடுகள் ஏற்க வேண்டும்:
பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், வரும் காலங்களில் கூடுதலாக அகதிகளை ஏற்க வேண்டும் என்றே சொல்கிறேன். இதைத் தான் நான் ஜோர்டான் மன்னரிடம் குறிப்பிட்டேன். நான் முன்பே சொன்னது போலக் காசா பகுதியில் மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.. அங்கே நிஜமாகவே பெரிய குழப்பம் தான் நிலவி வருகிறது.
பாலஸ்தீன மக்கள் அங்கிருந்து அதிகளவில் வெளியே வருகிறார்கள். இது தற்காலிகமாகவும் இருக்கலாம். அல்லது நிரந்தரமாகவே கூட அவர்கள் வெளியேறலாம். அவர்களுக்கு நாம் தங்கச் சரியான இடத்தை தர வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.
காசாவை சுற்றி மோதல்:
பல காலமாகவே காசா பகுதியைச் சுற்றி மோதல் நிலவி வருகிறது. இப்போது காசா பகுதி ஏதோ இடிக்கப்பட்ட தளம் போல இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து கட்டிடங்களுமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். இது குறித்து நான் இதர சில அரபு நாடுகள் உடனும் பேசுவேன். காசாவில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன அகதிகளுக்கு வேறு இடத்தில் நாம் வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கே அவர்கள் நிம்மதியாக வாழலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications