900 கிலோ குண்டை இஸ்ரேலுக்கு அனுப்பும் டிரம்ப்.. போர் முடிந்த பிறகும் வெடிகுண்டை அனுப்புவது ஏன்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் மத்திய கிழக்கில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே இஸ்ரேலுக்கு மிகப் பெரிய வெடிகுண்டு ஒன்றை அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துவிட்ட பிறகும் கூட இஸ்ரேலுக்கு ஏன் இவ்வளவு பெரிய வெடிகுண்டை அனுப்புகிறார் என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

டிரம்ப்:
குறிப்பாக மத்திய கிழக்கு மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும் டிரம்ப், முழுமையாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதற்கு முன்பு இருந்த பைடன் நிர்வாகமும் கூட இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டைத் தான் கொண்டு இருந்தது என்ற போதிலும், சில மூர்க்கத்தனமான தாக்குதல்களைத் தடுப்பதில் பைடன் நிர்வாகம் கவனம் செலுத்தியது. ஆனால், டிரம்ப் அப்படி இல்லை. முழுமையாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுக்கு 2,000 பவுண்டுகள் (907 கிலோ) குண்டுகளை வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த குண்டுகளை வழங்க அமெரிக்க ராணுவத்திற்கு பைடன் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. ஆனால், இந்த தடையை நீக்கி டிரம்ப் இப்போது உத்தரவிட்டுள்ளார். ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "நாங்கள் அதை (குண்டுகள்) விடுவித்துள்ளோம். சில நாட்களில் அது இஸ்ரேலுக்குச் சென்றுவிடும்" என்று கூறியிருந்தார்.
900 கிலோ வெடிகுண்டு:
காசாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான ரஃபாவில் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் இந்த குண்டுகளைப் பயன்படுத்தக்கூடும் என்பதாலேயே ஜோ பைடன் இந்த வெடிகுண்டு சப்ளையே நிறுத்தினார். இஸ்ரேல்- காசா மோதல் உச்சத்தில் இருந்த போது பைடன் நிர்வாகம் இந்த தடையை விதித்தது. சுமார் 900 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால் அது காசாவில் வரலாற்றில் இல்லாத அழிவை ஏற்படுத்தும்.
எந்தளவுக்கு ஆபத்து:
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் டைனமிக்ஸ் மற்றும் ஆர்டினன்ஸ் டாக்டிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதைத் தயாரித்துள்ளன. மார்க்-84 என அழைக்கப்படும் இந்த வெடிகுண்டு 900 கிலோ எடை கொண்டது. இது வெடித்தால் 360 மீட்டர் சுற்றளவுக்கு ஒன்றுமே இருக்காது. இந்த குண்டு வெடிக்கும் போது வெளியாகும் ஆற்றல் மிகவும் மோசமானது. சுமார் 800- 1,000 மீட்டருக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களையும் இது முழுமையாக அழித்துவிடும். மேலும், 3.4 மீட்டர் கான்கிரீட் மற்றும் 15 அங்குல உலோகத்தை இதனால் துளைக்க முடியும்.
போர் நிறுத்தத்திற்குப் பிறகு அனுப்புவது ஏன்:
இந்தளவுக்கு ஆபத்தான வெடி குண்டைத் தான் அமெரிக்கா இப்போது இஸ்ரேலுக்கு அனுப்புகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகும் இஸ்ரேலுக்கு ஏன் டிரம்ப் வெடிகுண்டை அனுப்புகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "இதை இஸ்ரேல் முறையாகப் பணம் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கு அவர்கள் எப்போதோ பணம் செலுத்திவிட்டார்கள். பைடன் நிர்வாகம் தான் இதை அனுப்பாமல் தடுத்து வைத்து இருந்தது. அதைத் தான் நாங்கள் அனுப்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications