அடுத்த 30 நிமிடங்களில் இ மெயில் வரும்..1,300 பேரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் ஜூம் சிஇஒ
வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்: வேலை போகப்போகிறது என்ற தகவல் பலரையும் இன்றைக்கு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ கான்பரன்சிங் நிறுவனமான ஜூம் நிறுவனமும் வேலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜூம் நிறுவனம், சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் தனது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பான இ மெயில் வரும் என்று கூறி ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
கொரோனா பரவிய காலத்தில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீடுகளுக்குள் முடங்கிய மக்களுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது ஜூம் உள்ளிட்ட வீடியோகான்பரன்சிங் செயலிகள்தான். கொரோனா முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் பல சமூக வலைத்தள நிறுவனங்கள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு இறுதியில் பணி நீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து அமேசான் நிறுவனமும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. இதற்கிடையே, இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.
இந்த நிலையில் ஜூம் நிறுவன சிஇஓ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பணி நீக்க அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஊழியர்களை "கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்கள்" என்று அழைத்த யுவான், அமெரிக்காவில் இருந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் வரும் என்றும், உள்ளூர் தேவைகளைப் பின்பற்றி அனைத்து அமெரிக்க அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளர்.

நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால், அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்திடம் இருந்து வரும் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் வணிகங்களின் மந்த நிலைக்கு மத்தியில் தங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஜூம் நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருவது பணியாளர்களிடையே பெரும் மன உளைச்சலையும் எப்போது வேலை போகுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications