இந்தியாவுக்கு துரோகம்.. பாக். அணு ஆயுத உண்மையை மறைத்த அமெரிக்கா! முன்னாள் CIA அதிகாரி ஷாக் தகவல்
வாஷிங்டன்: கடந்த 1998ல் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது. ஆனால், அதற்கு 10-15 ஆண்டுகளுக்கு முன்னரே பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருந்தது என்றும், இது இந்தியாவுக்கு ஆபத்தான விஷயம் என்று தெரிந்திருந்தும் அதை அமெரிக்கா தனது சுயலாபத்துக்காக மறைத்தது எனவும் முன்னாள் அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) அதிகாரி கூறியிருக்கிறார்.
இந்தியாவுடன் நாங்கள் உண்மையான நட்பை கடைபிடிக்கிறோம் என்று புஷ் தொடங்கி, ட்ரம்ப் வரை அமெரிக்க அதிபர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் இல்லை என்று, முன்னாள் சிஐஏ அதிகாரி 'ரிச்சர்ட் பார்லோ' உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, "இந்தியா 1998ல், பாகிஸ்தானுக்கு முன்னதாக அணு ஆயுத சோதனையை நடத்தியிருந்தது. ஆனால், உண்மையில் பாகிஸ்தான் 1980களிலேயே அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. 1982-1986க்கு இடையில் சுமார் 40 F-16 போர் விமானங்களை அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தது. இந்த விமானங்கள் அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் கொண்டவை. 1980களில் இந்த விமானங்களில் அணு ஆயுதங்கள் லோட் செய்யப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இது குறித்து அமெரிக்க அரசுக்கும் நாங்கள் அறிக்கை கொடுத்திருந்தோம். அந்த காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் நடந்துக்கொண்டிருந்தது. இந்த சண்டையில் அமெரிக்காவுக்கு உதவுவதாக ஆப்கனின் பக்கத்து நாடான பாகிஸ்தான் வாக்கு கொடுத்திருந்தது. எனவே, பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்று அப்போது அதிபராக இருந்த ரீகன் மற்றும் புஷ் தலைமையிலான நிர்வாகம், நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது.
என்னை போல, உளவாளிகள் பலருக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தது. இருப்பினும் அதை வெளியில் சொல்ல முடியவில்லை. அல்லது எங்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. காரணம் நாங்கள் உளவு தகவல்களை துல்லியமாக சேகரித்து தரும் ஆட்கள் மட்டுமே. இந்த விஷயத்தில் நான் வெளியில் சொல்ல முயன்றபோது எனது வேலை, பொருளாதாரம், வீடு உட்பட அனைத்தும் என் கையைவிட்டு போய்விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இப்போது வரை நான் வீடற்றவனாகவே இருக்கிறேன்.
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவெனில், கடந்த 1980ன் தொடக்கத்தில் பாகிஸ்தானின் கஹூட்டா அணு சக்தி மையத்தை தாக்க இஸ்ரேல்-இந்திய ராணுவத்திடம் கூட்டு திட்டம் இருந்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார். அவர் சொல்லியிருக்கும் தகவல்கள் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்திருக்கும். ஆனால் நம்முடன் நட்பாக இருப்பதாக சொல்லிக்கொண்டு, அமெரிக்கா இந்த தகவலை தனது சுயநலத்திற்காக மறைத்திருக்கிறது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது தெரிந்திருந்தால் சர்வதேச மையத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்க முடியும். அதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தானை தள்ளியிருக்க முடியும். இதையெல்லாம் அமெரிக்கா திட்டமிட்டு தடுத்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications