விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு..தள்ளிப்போகும் இந்தியாவின் புதிய சாதனை!
வாஷிங்டன்: இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா இன்று அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல இருந்தார். 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு செல்ல இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால், அவர் பயணிக்க இருந்த ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணம் தள்ளிப்போயுள்ளது.
ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று போக இருந்தனர். பயணம் மாலை 5.30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

பால்கன் -9 ராக்கெட் மூலம், இவர்கள் பயணிக்கும் 'டிராகன்' விண்கலம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், ராக்கெட்டில் எரிபொருளாக நிரப்பப்பட்ட திரவ ஆக்சிஜன் கசிந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஜூன்.10ம் தேதி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஜூன்.11ம் தேதிக்கு பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இப்போது எரிபொருள் கசிவால் பயணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது x தளத்தில், "ஸ்டேடிக் ஃபயர் பூஸ்டர் சோதனை நடத்தப்பட்டபோது இந்த திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய பொறியாளர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. எனவே, இன்று இந்த பயணம் ஒத்தி வைக்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, வீரர்கள் விண்வளெிக்கு பறப்பார்கள். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல இஸ்ரோ வெளியிட்டிருந்த அறிவிப்பில், "ககன்யான் திட்டத்திற்கு முன் மாதிரியாக ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா இன்று சர்வசேத விண்வெளி மையத்திற்கு பறக்க இருந்தார். ஆனால், பால்கன் ராக்கெட்டின் பூஸ்டர் சரிபார்ப்பின்போது, திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ராக்கெட் ஏவுதலுக்கு முன்னரும் பூஸ்டர் நிலையின் செயல்திறனைச் சரிபார்க்கும் சோதனை நடத்தப்படும்.
இன்றும் இந்த சோதனை 7 விநாடிகள் வரை நடத்தப்பட்டது. இதில்தான் பிரச்சனை இருப்பது முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிரச்சனையை சரி செய்ய இஸ்ரோ, ஆக்சியம் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிபுணர்கள் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். எனவே, இந்திய விண்வெளி வீரரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆக்சியம்-4 விண்வெளி பயணம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மற்ற சில நாடுகளுக்கும் முக்கியமான மிஷன் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 1984க்கு பிறகு நம் நாட்டை சேர்ந்தை வீரர் ஒருவர் விண்வெளிக்கு பறக்கிறார். அதேபோல போலாந்தை சேர்ந்த வீரர் ஒருரும் இவருடன் விண்வெளிக்கு செல்கிறார். 1978க்கு பிறகு போலாந்து வீரர் ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுதான் இரண்டாவது முறையாகும். இந்த பயணத்தில் ஹங்கேரி வீரர் ஒருவரும் இருக்கிறது. ஹங்கேரியும், 1980க்கு பிறகு இப்போதுதான் மீண்டும் விண்வெளிக்கு ஆட்களை அனுப்புகிறது.
மூன்று நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் விண்வெளிக்கு பறந்தாலும், அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சவுதி அரேபியா, பிரேசில், நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பா என சுமார் 31 நாடுகளின் சார்பில் 60 ஆய்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இதுதான் மிக அதிகமான ஆய்வாக அறியப்படுகிறது.
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உயிர்கள் எப்படி வளர்கிறது? மனிதர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறதா? மேம்படுகிறதா? என் பல கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள் மூலம் பதில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications