8 மாத கர்ப்பம்.. கூடவே கைக்குழந்தை வேற! திடீரென வந்த ஒற்றை மெயில்! ட்விட்டரில் பறிபோன வேலை! பரிதாபம்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை நல்ல வழிக்குக் கொண்டு வருவதாகக் கூறி எலான் மஸ்க் எடுக்கும் நடவடிக்கைகள் உலகெங்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது.
உலகில் அதிக பயனாளர்களைக் கொண்ட சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ட்விட்டர் உள்ளது. இருப்பினும், ட்விட்டரில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய வருவாய் கிடைக்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக பெரும் தொகை கொடுத்து வாங்கினார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

ட்விட்டர்
ட்விட்டர் நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற முடிவு செய்துள்ள எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதற்கட்டமாக ப்ளூ டிக் இலவசம் என இருந்ததை மாற்றிய அவர், ஒவ்வொரு மாதமும் ப்ளூ டிக் வசதிக்கு 8 டாலரைச் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இதுவே உலகெங்கும் பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் வெளிப்படையாகவே இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.

வேலையிழப்பு
இந்தச் சூழலில் அடுத்த அதிரடியாக ஆட்குறைப்பைத் தொடங்கினார் மஸ்க். கடந்த வெள்ளிக்கிழமை ஆட்குறைப்பிற்கான வேலைகள் தொடங்கியது. அங்கு 7500 ஊழியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களில் 50% பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் மார்கெட்டிங் உள்ளிட்ட சில பிரிவுகளில் இருந்த ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகவே நீக்கப்பட்டு உள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்
இந்த ஆட்குறைப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் கூட, இவ்வளவு விரைவில் இத்தனை பேரை வேலையைவிட்டுத் தூக்குவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஓவர் நைட்டில் வேலையிழந்தவர்களில் ஒருவர் தான் இந்த 8 மாத கர்ப்பிணிப் பெண். ட்விட்டரில் உள்ளடக்க மார்கெட்டிங் மேனேஜராக இருந்தவர் ரேச்சல் பான். இவருக்கு 8 மாதங்களில் மற்றொரு கை குழந்தையும் உள்ளார்.

ஓரே மெயில்
இவரும் கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த வியாழக்கிழமை அவரது லேப்டாப் அக்சஸ் துண்டிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அவ்வளவு தான் வேறு எந்தவிதமான ஃபோன் கால் அல்லது கடிதம் என எதுவும் அவருக்கு வரவில்லை.

கை குழந்தை வேறு
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த வியாழக்கிழமை ட்விட்டர் அலுவலகத்திற்குச் சென்று திரும்பினேன். ஆனால், அப்போது அது தான் ட்விட்டரில் கடைசி நாள் என எனக்குத் தெரியாது. நான் 8 மாத கர்ப்பிணி.. மேலும் 9 மாத கை குழந்தை உள்ளது. லேப்டாப் அக்சஸ் துண்டிக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டு உள்ளார். ஆட்குறைப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும் கூட கர்ப்பிணிப் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இன்சூரன்ஸ் கிடைக்குமா
அதேபோல இப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணி ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் நமது ஊரைப் போல இல்லாமல் மருத்துவத்துக்கு மிக அதிகம் செலவாகும். இதனால் இன்சூரன்ஸ் மிக முக்கியமானதாகும். இப்போது கர்ப்பிணி ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காமல் போனால் அதுவே பெரிய சிக்கலில் அவர்களைத் தள்ளிவிடும்.

எலான் மஸ்க்
ஆட்குறைப்புக்கு எதிர்ப்புகள் உள்ள போதிலும் எலான் மஸ்க் அதைத் தொடர்ந்து நியாயப்படுத்தியே வருகிறார். நிறுவனம் தினசரி நான்கு மில்லியன் டாலரை இழந்து வரும் போது, இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்து உள்ளார். மேலும், சமூக ஆர்வலர்கள் தரும் விளம்பரங்கள் குறைவதும் இதற்கு ஒரு காரணம் என அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications