அது மட்டும் நடந்தால்.. நான் பாகிஸ்தானுக்கு போவேன்! டிரம்ப் சொன்ன மேட்டர்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானால், அதற்காக நான் பாகிஸ்தானுக்கு செல்வேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானால், தான் பாகிஸ்தானுக்குச் செல்லக்கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான நிலைமை சாதகமாக மாறி வருவதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் உருவாகலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஈரானில் நிலைமை அற்புதமாக சென்று கொண்டிருப்பதாகவும், மிக விரைவில் ஒரு முடிவை எட்டலாம் என்றும் கூறியிருக்கிறார்.
டிரம்ப் தனது பேச்சில், "இஸ்லாமாபாத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானால் நான் அங்கே செல்லலாம். அவர்கள் என்னை விரும்புகிறார்கள்" என்று கூறினார். "நான் பாகிஸ்தான் செல்வேன்" என்றும் அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். கடந்த ஆண்டு அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் நிலத்தடியில் சேமித்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைப்பது உட்பட, பேச்சுவார்த்தையில் உள்ள பெரும்பாலான நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் பாகிஸ்தானின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை டிரம்ப் பாராட்டினார். பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மிகச் சிறந்தவர்கள் என்றும் அவர் புகழ்ந்தார். ஒரு பெரிய ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும், அது குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அணு ஆயுதங்களை ஈரான் பெறுவதைத் தடுப்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்பதை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். "ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதிசெய்வதே நாம் செய்ய வேண்டிய பெரிய விஷயம். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது என்பது மிகவும் முக்கியம், அதற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால், விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும், இது கச்சா எண்ணெய் விலை குறைப்பு இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications