'இன்னும் 90 நாட்கள்தான்..' ஆப்கன் அரசு அவ்வளவுதான்.. அமெரிக்கா ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: ஆப்கான் தலைநகர் காபூலை தாலிபான்கள் இன்னும் 30 நாட்களில் தனிமைப்படுத்திவிடுவார்கள் என்றும் 90 நாட்களில் கைப்பற்றிவிடுவார்கள் என்றும் அமெரிக்கா புலனாய்வுத் துறை மதிப்பிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்தன. இதனால் அந்தச் சமயத்தில் தாலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரிக்காமலிருந்தது.
இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கியது. சரியாக இதற்காகவே காத்திருந்த தாலிபான் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின.

தாலிபான்கள்
அமெரிக்கா துணைக்கு இல்லாததால் தனித்து விடப்பட்ட ஆப்கன் படைகளைப் பல இடங்களில் தாலிபான்கள் வரிசையாக வீழ்த்தியது. மேலும், பல்வேறு பகுதிகளிலும் எந்தவித சண்டையும் இல்லாமலும் கூட ஆப்கன் ராணுவம் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் மளமளவெனத் தாக்குதல்களை நடத்திய தாலிபான்கள், சுமார் 80% மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி விட்டனர்.

ஆட்சி கவிழ்ப்பு
முதலில் எல்லைகளையும், ஊரக பகுதிகளையும் கைப்பற்றிய தாலிபான்கள், இப்போது நகர்ப்புறங்களைக் குறி வைத்து தங்கள் தாக்குதல்கள் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பிராந்தியங்களின் தலைநகர்களைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சூழலில் ஆப்கன் அரசு எப்போது கவிழ்க்கப்படும் என்பது குறித்து பல்வேறு வியூகங்களும் மதிப்பீடுகளும் இணையத்தில் பரவி வருகிறது.

90 நாட்கள் தான்
இந்நிலையில், ஆப்கன் நிலை குறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையின் புதிய மதிப்பீடுகள் குறித்த அறிக்கையை அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபான்கள் அடுத்த 30 நாட்களில் தனிமைப்படுத்திவிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்னும் 90 நாட்களில் காபூல் நகரைக் கைப்பற்றி ஆப்கன் அரசைத் தாலிபான்கள் கவிழ்க்க வாய்ப்புகள் அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்க அரசு இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

மிக மோசம்
அமெரிக்க புலனாய்வுத் துறை குறிப்பிட்டதைப் போலவே ஆப்கனில் பல பகுதிகளில் தாலிபான்களில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளன. தெற்கு கந்தகர் பகுதியுள்ள மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனைக்குத் தினசரி பல நூறு ஆப்கன் படை வீரர்கள் காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும் வருவதாகவும் உள்நாட்டுப் போர் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். கந்தகரில் மட்டுமில்லை ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் இப்போது இது தான் நிலைமை. தலைநகர் காபூலுக்கு உள்ள நுழைவாயில்கள் அனைத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இப்போது தாலிபான்கள் இறங்கியுள்ளனர்

யாருக்கும் தெரியாது
இந்தச் சூழலில் அமெரிக்கா புலனாய்வு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் எங்குத் தற்கொலைப் படை தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சம் உள்ளது. இதனால், அனைத்து நாடுகளும் தங்கள் தூதர்களையும் அதிகாரிகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனென்ரால் ஆப்கானில் எப்போது இந்த உள்நாட்டுப் போர் முடியும் என்றும் யாருக்கும் தெரியாது. எப்போது அமைதி திரும்பும் என்றும் தெரியாது" என்றார்.

அமெரிக்கா கண்டனம்
தாலிபான்களின் இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா உள் துறை கடுமையாகக் கண்டித்துள்ளது. 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறி தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என உறுதி அளித்திருந்த தாலிபான்கள் இப்போது, போர் மூலம் ஆட்சி கவிழ்ப்புக்கு முயல்வதாகவும் இதில் அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தாலிபான்கள் முற்றிலுமாக மறுத்துள்ளது,

அதிப் பைடன்
ஆப்கானிஸ்தான் அரசை இப்படி தனியாக விட்டுவிட்டு வெளியேறுவது சரியான முடிவு தான் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் பைடன், "ஆப்கனை கட்டமைப்பது எங்கள் வேலை இல்லை. கடந்த 20 வருடங்களாக ஆண்டுதோறும் சுமார் ஒரு டிரில்லியன் டாலர் வரை நாங்கள் அங்குச் செலவழித்தும். எனவே இப்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றதில் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை" என அவர் தெரிவித்திருந்தார்.
Recommended Video

அமைதி திரும்பாது
போர் ஒறு புறம் நடைபெற்றாலும் தோஹாவில் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், அஷ்ரஃப் கானி அரசு நீக்கப்பட வேண்டும் என்பதில் தாலிபான்கள் உறுதியாக உள்ளனர். இது பற்றிக் கடந்த சில வாரங்களுக்கு முன் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், "இப்போது வரை அஷ்ரஃப் கானி அரசு எங்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். எனவே, அஷ்ரஃப் கானி அதிபர் பதவியில் இருக்கும்போது எங்களைப் போரை நிறுத்த சொல்வது, சரணடைய வேண்டும் என வலியுறுத்துவதற்கு இணையானது. அவர்களுக்கு அமைதி திரும்ப வேண்டும் என்பது நோக்கமல்ல, எங்களைச் சரணடைய வைக்க வேண்டும் என்பதே நோக்கம். ஆனால், புதிய அரசு அமைந்த பிறகே, போர் முடிவுக்கு வரும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். புதிதாக ஒரு அரசு அமைந்த பிறகு இங்குப் போர் இருக்காது" என்று கூறியிருந்தார்.

தாலிபான் ஆட்சி
தாலிபான்களின் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை வரை ஆட்சி செய்தது. அந்த சமயத்தில் பெண்கள் கல்வி கற்கவும் பள்ளி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இப்போது ஆப்கனில் மீண்டும் போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், ஆப்கன் மக்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்ல விசா வேண்டி விண்ணப்பித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications