சிவப்பு கோட்டை தாண்ட முடியாது.. அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை! திட்டவட்டமாக சொன்ன இந்தியா
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், டொனால்ட் டிரம்ப்பின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. ஒரு மேஜர் விஷயத்தில் இன்னுமே இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம் எட்டப்படவில்லையாம். இதனால் இரு தரப்பு ஒப்பந்தம் இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகள் மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன் பிறகு சில நாட்களில் 90 நாட்கள் வரிகளை நிறுத்தி வைப்பதாகவும் அதற்குள் உலக நாடுகள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் அறிவித்தார். அந்த 90 நாள் காலக்கெடு 9ம் தேதியுடன் முடிவடைகிறது.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம்
இதுவரை பிரிட்டன் மட்டுமே அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்தியா உடனான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் மிக விரைவில் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறியிருந்தார். இருப்பினும், தற்போது இந்த ஒப்பந்தம் இறுதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது விவசாய ஏற்றுமதி தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரெட் லைன்
இந்தியாவில் பால் உற்பத்தித் தொழில் முக்கியமான ஒன்றாகும். இந்தத் தொழிலை நம்பி 8 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் சிறு விவசாயிகளே. இதனால் பால் பண்ணை துறையில் சலுகை காட்ட முடியாது என்பதை இந்தியப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாம். இது குறித்துப் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், "பால் பண்ணை துறையில் விட்டுக் கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. அது ஒரு ரெட் லைன் போன்றது. அதைத் தாண்ட முடியாது" என்று கூறினார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்காகச் சென்ற சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு அமெரிக்காவில் இருக்கிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை ஆறாவது நாளான நேற்று நடைபெற்றது. முழு உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேச இருக்கிறார்.
இந்திய அதிகாரிகள் சொல்வது என்ன
குறிப்பாக, ஜவுளி, ஆடை, நகை, தோல் பொருட்கள், பிளாஸ்டிக், கெமிக்கல், இறால், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை வழங்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த சலுகைகள் அமெரிக்காவில் எந்த உள்நாட்டு நலன்களையும் பாதிக்காது. எந்த எதிர்ப்பும் இருக்காது" என்றார்.
பின்னணி
அதேநேரம் இது இடைக்கால ஒப்பந்தம் தான்.. இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான முதல் படியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடன்பாடு எட்டப்பட்டால் இந்தியாவுக்கு டிரம்ப் விதித்திருந்த 26% வரிகள் மீண்டும் வராது. ஜூலை 9ம் தேதி இதற்கான காலக்கெடு என்பதால் அதற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள், மின்சார வாகனங்கள், ஒயின், பெட்ரோ கெமிக்கல் பொருட்கள், ஆப்பிள், மரக்கட்டை மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்கள் மீது அமெரிக்கா வரிச் சலுகை பெற விரும்புகிறது. மேலும், அமெரிக்கா விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகளில் இந்தியாவிடம் இருந்து வரிச் சலுகைகளை எதிர்பார்க்கிறது. ஆனால் இது இந்திய விவசாயிகள் நலன்களைப் பாதிக்கும் என்பதால் அந்தச் சிவப்புக் கோட்டை தாண்ட இந்தியா மறுக்கிறது. இதன் காரணமாகவே பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications