தாறுமாறாக சுட்ட இந்தியர்! பயத்தில் ஒளிந்த குழந்தைகள்.. அடுத்த நொடி பயங்கரம்! அமெரிக்காவில் திக்திக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் திடீரெனத் தனது குடும்பத்தினரை நோக்கி தாறுமாறாக துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியிருக்கிறார். அப்போது அங்கிருந்த 3 குழந்தைகள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளனர். வீட்டில் ஒளிந்து கொண்டு 911 போலீஸுக்கு கால் செய்துள்ளனர். இதனால் அவர்கள் சரியான நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். பெரும்பாலும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்த மாட்டார்கள். இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துவிடுகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் அமெரிக்காவில் இப்போது நடந்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்றில் நடந்த தகராறு நேற்று வன்முறையாக வெடித்து. இதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொடூரம்
அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியரான விஜய் குமார் என்பவர் குடும்ப தகராறில் தனது தனது மனைவி மற்றும் மூன்று இந்திய வம்சாவளி உறவினர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியான லாரன்ஸ்வில்லே நகரில் உள்ள அவர்களது வீட்டில் இச்சம்பவம் நடந்தது.
குழந்தையின் புத்திசாலித்தனம்
துப்பாக்கிச்சூடு நடந்தபோது குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுப் பீதியடைந்த குழந்தைகள் அங்குப் பீரோவில் ஒளிந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட விஜய் குமாரின் குழந்தை அங்கிருந்தபடி 911 என்ற எமர்ஜென்சி நம்பருக்கு போன் செய்துள்ளார். அந்தச் சிறுமியின் துணிச்சலான செயலால் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வர முடிந்துள்ளது.. குழந்தைகள் காயமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 43 வயதான மீனு தோகரா (குமாரின் மனைவி), 33 வயதான கௌரவ் குமார், 37 வயதான நிதி சந்தர், 38 வயதான ஹரிஷ் சந்தர் ஆகியோர் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் போன் காலை தொடர்ந்து உடனடியாக ப்ரூக் ஐவி கோர்ட் பகுதியில் 1000ஆம் தெருவுக்கு விரைந்த போலீசார் குழந்தைகளை மீட்டனர். மேலும், அங்கு வீட்டில் நான்கு பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
மீட்பு
அங்கிருந்த குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 51 வயதான விஜய் குமார் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. என்ன நடந்தது... விஜய் குமார் ஏன் இப்படி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நடத்தினார் என்பது தொடர்பாக உள்ளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய தூதரகம்
அட்லாண்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தூதரகம், "ஒரு குடும்பத் தகராறில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் நாங்கள் வருத்தமடைகிறோம். இதில் ஒரு இந்திய நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.
அமெரிக்காவில் துப்பாக்கியை வாங்கப் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. அங்கு மிக எளிதாகத் துப்பாக்கிகள் கிடைப்பதே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அங்குத் துப்பாக்கி விதிகளைக் கடுமையாக்க வேண்டும் என்று பல காலமாகவே குரல்கள் இருந்தாலும் கூடத் துப்பாக்கியைத் தயாரிக்கும் நிறுவனங்களின் லாபியால் இது தொடர்பான சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை.












Click it and Unblock the Notifications